கொரோனாவால் கேள்விக்குள்ளான 160 கோடி மாணவர்களின் கல்வி? ஐ.நா. வெளியிட்டுள்ள அதிர்ச்சி ஆய்வறிக்கை!

ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், ‘கொரோனாவும் கல்வியும்’ என்ற ஆய்வறிக்கையை நேற்று வெளியிட்டுள்ளார். அதில் “ஒருவரின் முன்னேற்றத்திற்கும், எதிர்கால சமுதாய வளர்ச்சிக்கும் கல்வி மிகவும் அவசியம். கல்வி, பல்வேறு வாய்ப்புகளை வழங்கி, சமூகத்தில் ஏற்றத் தாழ்வை குறைக்க உதவுகிறது. அத்துடன், நிலையான வளர்ச்சிக்கும் வழி காட்டுகிறது.
இந்நிலையில், கொரோனாவால், இதுவரை இல்லாத அளவில், மாணவர்கள் கல்வி கற்பது பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மத்தியில், கொரோனா பரவலை தடுக்க, 160 நாடுகளில் பள்ளிகள் மூடப்பட்டன. இதனால், 100 கோடிக்கும் அதிகமான மாணவ – மாணவியரின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தாண்டு, 4 கோடிக்கும் அதிகமான குழந்தைகள், மாணவர்கள் கல்வி கற்கும் வாய்ப்பை இழந்து உள்ளனர். வரும் ஆண்டில், மழலையர் பள்ளி முதல் ஆரம்ப பள்ளி வரை, 2.38 கோடி மாணவ – மாணவியர், இடையிலேயே பள்ளியில் இருந்து விலகக் கூடும் என, கணிக்கப்பட்டு உள்ளது. இதை தடுக்க, துணிச்சலான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். எதிர்காலத்தில் தரமான கல்வி திட்டத்தை வழங்க முயற்சிக்க வேண்டும்.
மாணவர்களுக்கு, வானொலி, ‘டிவி’ மற்றும் இணையம் வாயிலாக பாடம் நடத்தப்படுகிறது. ஆசிரியர்களும், பெற்றோரும் கடுமையான உழைப்பை வழங்குகின்றனர். இருந்தும், பெரும்பாலான மாணவர்களுக்கு இந்த வசதிகள் சென்று சேரவில்லை. இந்த வகையில், சிறுபான்மையினர், மாற்றுத்திறனாளிகள், புலம்பெயர்ந்தோர், அகதி மாணவர்கள், தொலைதுாரத்தில் உள்ளோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில், கொரோனா பரவலுக்கு முன்னரே, 25 கோடி குழந்தைகள், பள்ளியை விட்டு வெளியேறி வந்தனர். வளர்ந்த நாடுகளிலும், 25 சதவீத உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் தான், குறைந்தபட்ச திறனுடன் படிப்பை முடித்து வெளியே வருவதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
அதனால், கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள கல்வித் துறையில், உலக நாடுகள் பெருமளவு முதலீடு செய்ய வேண்டும். அதற்கு நான்கு திட்டங்களை நாம் செயல்படுத்த வேண்டும். பள்ளிகளை திறப்பது, முதலீடுகளில் கல்விக்கு முன்னுரிமை அளிப்பது, கல்வி பயில வசதியற்றோருக்கு, கல்வி வழங்க நடவடிக்கை எடுப்பது, எதிர்கால கல்வித் திட்டங்களை வகுப்பது ஆகிய நான்கு அம்சங்களை, உலக நாடுகள் முன்கூட்டிய திட்டமிடலுடன் செயல்படுத்த வேண்டும்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.