கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு நுரையீரல் சேதம்

சீனாவின் வூகான் நகரில், கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களுக்கு நுரையீரல் சேதமடைந்திருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அண்டை நாடான, சீனாவின் வூகான் நகரில் தான், முதன்முதலாக கொரோனா வைரஸ் தொற்று பரவியது. அங்கு, கொரோனாவில் இருந்து மீண்ட, சராசரி 59 வயதுடைய 100 பேரை, வூகான் பல்கலைக்கழகத்தின் ஜாங்னான் மருத்துவமனை கடந்த ஏப்ரல் மாதம் முதல் கண்காணித்து வந்தது. ஜூலை மாதத்துடன் முடிந்த முதற்கட்ட முடிவில், இந்த 100 பேரில், 90 பேரின் நுரையீரல் சேதமடைந்திருப்பது தெரிய வந்துள்ளது.
அதாவது, இவர்களின் நுரையீரல் காற்றோட்டம், வாயு பரிமாற்ற செயல்பாடுகள், ஆரோக்கியமான மற்றவர்களின் நிலைக்கு மீளவில்லை. கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் 3 மாதங்களுக்கு பிறகும், ஆக்சிஜன் இயந்திரங்களை நம்ப வேண்டியதிருக்கிறது என்று பீஜிங் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
மேலும் கொரோனாவிலிருந்து மீண்ட 65 வயதுக்குட்பட்டோரில், 10 சதவீதம் பேரின் உடலில், நோய் எதிர்ப்பு பொருள் மறைந்து விடுவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.