“சென்னை துறைமுகத்தை ஒட்டிய கிடங்கு ஒன்றில் 740 டன் அமோனியம் நைட்ரேட்! ராமதாஸ் பகீர்… சுங்கத்துறை பதில்…

சென்னை கிடங்கில் இருக்கும் அமோனியம் நைட்ரேட் வெடிமருந்தை உடனே பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
சமீபத்தில் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில், குடோனில் சேமிக்கப்பட்டிருந்த அமோனியம் நைட்ரேட் வெடித்து 100க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனம் மருத்துவர் ராமதாஸ், “சென்னை துறைமுகத்தை ஒட்டிய கிடங்கு ஒன்றில் 740 டன் அமோனியம் நைட்ரேட் எனும் வெடிமருந்து 5 ஆண்டுகளாக இருப்பு வைக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்தி மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. லெபனான் நாட்டில் மிகப்பெரிய வெடிவிபத்து ஏற்பட்டதற்கு இந்த வெடிமருந்து தான் காரணமாகும்!

சென்னை கிடங்கில் உள்ள அமோனியம் நைட்ரேட்டால் அதேபோன்ற வெடிவிபத்து ஏற்படும் ஆபத்து உள்ளது. அதைத் தடுக்க சென்னை கிடங்கில் உள்ள அமோனியம் நைட்ரேட் வெடிமருந்தை பாதுகாப்பாக அப்புறப்படுத்தி, உரம் தயாரிப்பு போன்ற பிற தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்!” எனத் தகவல் தெரிவித்து எச்சரித்துள்ளார்.
இதனிடையே, கைப்பற்றப்பட்ட அமோனியம் நைட்ரேட் பாதுகாப்பாக உள்ளதாக சுங்கத்துறை விளக்கமளித்துள்ளது.