கேரள விமான விபத்து; இரங்கல் தெரிவித்த தமிழக முதல்வர்!!

கேரள மாநிலத்தில் அடுத்தடுத்த அதிச்சி சம்பவங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. நேற்று இடுக்கி மாவட்டம் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி 17 பேர் உயிரிழந்தனர். மேலும் உயிருடன் மீட்கப்பட்ட 16 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலர் நிலச்சரிவில் சிக்கி இருந்ததால் அவர்களை மீட்கும் பணி தொய்வின்றி நடந்து வருகிறது.
அதனைத்தொடர்ந்து நேற்று காலை வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து கோழிக்கோடு விமான நிலையத்துக்கு 190 பயணிகளை ஏற்றிக் கொண்டு வந்த ஏர் இந்தியா விமானம், தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் விமானி டி.எம்.சாதே , துணை விமானி, குழந்தை உட்பட 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 120 பேர் லேசான காயங்களுடனும் 20 பேர் பலத்த காயங்களுடனும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அடுத்தடுத்து ஏற்படும் இது போன்ற சம்பவங்கள் கேரள மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
ஏர் இந்தா விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி, பிரதமர் என்று பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழக முதல்வர் பழனிசாமியும் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து தெரிவித்துள்ளார்.
அவர் “கோழிக்கோடு விமான விபத்தை அறிந்து மிகுந்த மன வேதனையடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மனவலிமை கிடைக்கவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் இறைவனை வேண்டுகிறேன்!” என்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.