ஆண்களை மலடாக்கும் ‘பாக்டீரியா’; சீனாவில் பரவுகிறது!!

ஆண்களை மலட்டுத்தன்மை உடையவர்களாக மாற்றும் புதிய ‘பாக்டீரியா’ நோய் தாக்குதல் சீனாவில் கண்டறியப்பட்டுள்ளது.
அண்டை நாடான சீனாவின் வடமேற்கில் கன்சு மாகாணத்திலிருக்கும் லான்ஷோ பகுதியில் ‘புருசெல்லோசிஸ்’ என்ற புதிய ‘பாக்டீரியா’ நோய் கண்டறியப்பட்டுள்ளது. கால்நடைகளுடனான தொடர்பால் பரவுவதாக கண்டறியப்பட்டுள்ள இந்த பாக்டீரியாவின் தாக்குதல் 3245 பேரிடம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மத்திய தரைக்கடல் காய்ச்சல் என அழைக்கப்படும் இந்த நோய் பாதிப்பால் தலைவலி தசை வலி காய்ச்சல் ஏற்படுவதுடன் மூட்டுவலி தசை வீக்கம் போன்றவை இருக்கும் என அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.
இந்நோயால் பாதிக்கப்படும் ஆண்களின் விந்தணுக்கள் வீக்கம் அடைவதுடன் மலட்டுத்தன்மையை உருவாக்கலாம் என தெரியவந்துள்ளது. இந்த நோய் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு மிக அரிதாகவே பரவும் என்றாலும் அசுத்த உணவு அல்லது பாக்டீரியாவை சுவாசிப்பதால் வேகமாக பரவுகிறது.
இந்த பாக்டீரியா தொடர்பாக 21 ஆயிரம் பேரிடம் பரிசோதனை நடத்தியதில் 3245 பேரிடம் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதுடன் இறப்புகள் ஏதும் இல்லை. இந்த நோயின் பரவல் மற்றும் பாதிப்பு கவலையை ஏற்படுத்தி உள்ளதாக சீன அரசின் ‘குளோபல் டைம்ஸ்’ பத்திரிகை தெரிவித்துள்ளது.