“நாங்களும் சாதனை படைப்போம்ல” பாம்பனில் 100 வருடங்களுக்கு பிறகு ஒரே நாளில் 100மி.மீ. தாண்டிய மழை!!!

தமிழகத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. நேற்று சென்னையில் இரவு நேரத்தில் நல்ல கனமழை பெய்தது. அதேபோல் டெல்டா மாவட்டங்கள் உட்பட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. இந்த நிலையில் வங்க கடலில் தற்போது மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதனால் தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று இந்திய வானிலை மையம் கூறியுள்ளது.
இந்த நிலையில் நேற்று பெய்த மழை தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது இணைய பக்கத்தில், “இந்தியாவில் தென்மேற்கு பருவமழை காலத்தில் மிகவும் வறட்சியான பகுதி என்றால் அது ராமநாதபுரத்தில் இருக்கும் பாம்பன்தான். பாம்பனில் கடந்த ஆகஸ்ட் மாதம் பெய்த சராசரி மழை அளவு வெறும் 15 மிமீதான்.
அதேபோல் தென்மேற்கு பருவமழை காலமான ஜூன் 1 முதல் செப்டம்பர் 30 வரையிலும் பாம்பன் பகுதியின் சராசரி மழை அளவு 66 மிமீ ஆக மட்டுமே இருந்து வந்துள்ளது. தூத்துக்குடியோடு சேர்த்து இந்த பாம்பன் பகுதிதான் இந்தியாவிலேயே தென்மேற்கு பருவமழை காலத்தில் அதிக வறட்சியான பகுதியாகும்.
ஆனால் பாம்பன் பகுதியில் எப்போதும் வடகிழக்கு பருவமழையின் போது நன்றாக மழை பெய்யும். சராசரியாக 1000 மிமீ வரை இங்கு பெய்யும். பாம்பன் பகுதியின் 90% மழை அக்டோபர் முதல் டிசம்பர் வரை பெய்யும். தென்மேற்கு பருவமழை சமயத்தில் இங்கு மிக மிக அரிதாகவே மழை பெய்யும்.
ஆனால் நேற்று பாம்பன் – மண்டபம் பகுதியில் மிகவும் விசித்திரமான மழை இரவு நேரத்தில் பெய்தது. சில மணி நேரத்தில் 121.88 மிமீ மழை பாம்பன் பகுதியில் பெய்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் இரண்டு பெரிய ரெக்கார்ட்களை இந்த மழை முறியடித்து இருக்கிறது. பாம்பன் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த 121.88 மிமீ மழை, இதற்கு முன் 1937ம் ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதி பெய்த 73.9 மிமீ மழை சாதனையை முறியடித்து உள்ளது.
இதற்கு முன் ஆகஸ்ட் மாதத்தில் அதிகபட்சம் மழை 1910ல் பதிவானது. இதன் அளவு 103.6 மிமீ ஆகும். ஆனால் 100 வருடங்களுக்கு முன் பதிவான இந்த ஒரு மாத ரெக்கார்ட்டை சில மணி நேரத்தில் பாம்பன் மழை முறியடித்து உள்ளது என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் குறிப்பிட்டுள்ளார்.