இத தகவல கேட்டா, ரஜினி ரசிகர்களுக்கு அப்படியே ஒரு நிமிஷம் தலை சுத்திரும்….!

ரஜினி தனது கட்சியை அடுத்த ஆண்டு பிப்ரவரியில் ஆரம்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரஜினியின் அரசியல் வருகையை மக்கள் எதிர்பார்க்கிறார்களோ இல்லையோ, அவரது மன்ற நிர்வாகிகள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நான் அரசியலுக்கு வருவேன் என்று ரஜினி கூறி 2 ஆண்டுகள் ஆகின்றன. இதற்காக தனது ரசிகர் மன்றங்களை, ரஜினி மக்கள் இயக்கமாக மாற்றினார். இதன் பின்னர், இயக்கத்தில் உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் அவரது நிர்வாகிகள் ஈடுபட்டனர். இதன் பணியும் முடிந்துவிட்டது. தற்போது, ரஜினி கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வர வேண்டியதுதான் பாக்கி.
ரஜினிகாந்த் ஏப்ரலில் ரஜினி கட்சி ஆரம்பிப்பார் என்று அவரது சகோதரர் சத்யநாராயண கெய்க்வாட் கூறியிருந்தார். கொரோனாவால் தற்போது அந்த அறிவிப்பு தள்ளிபோய் விட்டது. 2021-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் தான் எங்கள் இலக்கு என்று அறிவித்த ரஜினி விரைவில் அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே ரஜினியின் தீவிர ரசிகர் முத்துமணி என்பவர், “மதுரையில் தான் ரஜினி தனது முதல் ரசிகர் மன்றத்தை துவக்கினார். அதனால், நவம்பரில் ரஜினி கட்சி ஆரம்பித்தால், தன் முதல் மாநாட்டை மதுரையில் தான் கூட்டுவார்” என்று கூறினார். இதனால் ரஜினி ரசிகர்கள் தெம்பானார்கள்.
இந்நிலையில் ரஜினிகாந்தின் புதிய கட்சி 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தொடங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. தேர்தலுக்கு 3 மாதங்களுக்கு முன்பு கட்சி குறித்து அறிவிக்க ரஜினி திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.
பல கட்சிகள் தேர்தலுக்கான வேலைகள், கூட்டணிகள், சீட் பேரங்களில் இறங்கிவிட்ட நிலையில், நவம்பரிலாவது ரஜினி கட்சி ஆரம்பித்ததும் வேலைகளை ஜோராக செய்யலாம் என்று மன்ற நிர்வாகிகள் காத்திருந்ததாக சொல்லப்பட்டது. இந்நிலையில் தற்போது வந்துள்ள தகவல், அவரது ரசிகர்களை சோர்வடைய செய்துள்ளது. மாற்றத்தை தருவேன் என்றவர், ஆன்மீக அரசியலை முன்னெடுத்து செல்வேன் என்றவர், மறுபடியும் மறுபடியும் இப்படி பின்வாங்குவது சரியா என்று மக்கள் முணுமுணுக்க ஆரம்பித்துவிட்டனர். பிப்ரவரி மாதம் மட்டும் ரஜினி கட்சியை ஆரம்பிக்காவிட்டால், ரசிகர்கள் மொத்தமாகவே டயர்ட் ஆகிவிடுவார்கள் என்பது நிச்சயம்!