மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்கள் கேரளாவில் அமல்படுத்தப்படாது என அம்மாநில வேளாண் மந்திரி தெரிவித்துள்ளார்.
மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி டெல்லியில் விவசாயிகள் 12-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறனர். மேலும், தங்கள் கோரிக்கையை வலியுறுத்தும் வகையில் நாளை நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு விவசாய அமைப்புகள் அழைப்பு விடுத்துளன.
விவசாயிகள் நடத்தும் நாடு தளவிய அளவிலான இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி, திமுக உள்பட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. பல்வேறு தொழில் அமைப்புகளும், சங்கங்களும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
மேலும், வேளாண் சட்டங்கங்களை மத்திய அரசு உடனடியா திரும்பப்பெற வேண்டும் எனவும் பல்வேறு கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. இந்த சட்டங்களுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ள பஞ்சாப் அரசு தங்கள் மாநிலத்தில் வேளாண் சட்டங்கள் அமல்படுத்தப்படாது என தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அம்மாநில சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பல்வேறு தரப்பில் இருந்து வேளாண் சட்டங்கள் மீது எதிர்ப்பு எழுந்துள்ளதால் மத்திய அரசுக்கு அழுத்தம் அதிகரித்துவருகிறது.
இந்நிலையில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்கள் கேரளாவில் அமல்படுத்தப்படாது எனவும், அந்த சட்டங்களை எதிர்த்து கேரளா அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் எனவும் அம்மாநில வேளாண் மந்திரி சுனில் குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் இந்த வாரத்தில் வழக்குத்தொடரப்படும். இந்த விவசாய விரோத சட்டங்கள் கேரளாவில் அமல்படுத்தப்படாது. அதற்கு பதிலாக மாற்று வேளாண் சட்டங்களை அமல்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்படும்.என்றார்.
