சாத்தான்குளம் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் இருவரும் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டு காவல்துறையால் கடுமையாக தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது.
மேலும் இவ்வழக்கின் சிசிடிவி காட்சிகள் எல்லாம் வெளிவந்து தந்தை மகன் மீது எந்தவித குற்றமும் இல்லை எனவும் மக்களுக்கு தெரியவந்தது. இந்த வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றி விசாரித்து வந்தனர். மேலும் ஆய்வாளர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர் ரகு கணேஷ், உள்பட 10 போலீசார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
கடந்த ஜூலை 21-ஆம் தேதி, சிறப்பு சார்பு ஆய்வாளர் பால்துரை கொரோனா உறுதி செய்யப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கொரோனா பாதிக்கப்பட்ட பால்துரை அவர்களுக்கு நீரிழிவு நோய் இருக்கும் நிலையில் ஆகஸ்ட் 8-ஆம் தேதி உடல் நிலை மோசமாகி தீவிர சிகிச்சை பிரிவு வார்டுக்கு மாற்றப்பட்டார்.
மேலும் பால்துரை அவர்களின் மனைவி மங்கயர்திலகம் தனது கணவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்குமாறு, மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது, சிறப்பு சார்பு ஆய்வாளர் பால்துரை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாக தகவல் வெளியாகியது. சிறைக்கைதியான பால்துரை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
