“கட்சித் தலைமை மன்னித்தால், நானும் மன்னிப்பேன்” சச்சின் பைலட் வருகை குறித்து அசோக் கெலாட் கருத்து!

ராஜஸ்தானில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் முதல்வராக இருக்கும் அசோக் கெலாட்டுக்கும், துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட்டுக்கும் இடையே அதிகார மோதல் ஏற்பட்டது.
காங்கிரஸ் கூட்டங்களில் சச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்எல்ஏக்கள் தனி அணியாகச் செயல்படத் தொடங்கியதால், 19 பேரையும் கட்சியிலிருந்து நீக்க நடவடிக்கை எடுத்தனர். ஆனால், சபாநாயகர் நடவடிக்கைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் சச்சின் பைலட் தொடர்ந்த வழக்கில் நடவடிக்கை எடுக்கத் தடை விதிக்கப்பட்டது.

இந்தச் சூழலில் தனக்குப் பெரும்பான்மை இருக்கிறது என்பதை நிரூபிக்க முதல்வர் அசோக் கெலாட் முடிவு செய்தார். ஆளுநர் மிஸ்ரா ஆகஸ்ட் 14-ம் தேதி பேரவையைக் கூட்ட உத்தரவிட்டுள்ளார்.
இந்தச் சூழலில் அதிருப்தி காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இருவரையும் தனியே சந்தித்துப் பேசினார்.
ராஜஸ்தான் அரசியலில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ள சூழலில் இந்த மூன்று தலைவர்களின் சந்திப்பு சுமுகமான மாற்றத்தை உருவாக்கியது.

ராஜஸ்தான் அதிருப்தி காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் எழுப்பியுள்ள பிரச்சினை குறித்து விவாதிக்க 3 பேர் கொண்ட கமிட்டி ஒன்றை நியமிக்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முடிவெடுத்துள்ளார். இதனால் சச்சின் பைலட் கட்சிக்கு மீண்டும் திரும்பும் சூழல் ஏற்பட்டுள்ளது.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் இதுகுறித்து கூறுகையில் ”ராஜஸ்தான் அரசை கவிழ்க்க பாஜக பல முயற்சிகளை மேற்கொண்டது. அவர்களது சதி முறியடிக்கப்பட்டுள்ளது. அதிருப்தி ஏற்பட்டவர்கள் இன்று கட்சிக்கு திரும்பியுள்ளனர். கட்சித் தலைமை அவர்களை மன்னித்து ஏற்றுக் கொண்டால் அவர்களை நானும் வரவேற்பேன்” எனக்கூறினார். அதேசமயம் சச்சின் பைலட்டிற்கு கட்சித் தலைமை அளித்த உறுதி மொழி குறித்து கேட்டதற்கு அசோக் கெலோட் பதிலளிக்க மறுத்து விட்டார்.