“11ம் வகுப்பு மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 24ல் தொடங்கும்” அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!!

சென்னை தலைமை செயலகத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது: “நேற்று வெளியான 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் எந்த குழப்பமும் இல்லை. காலாண்டு, அரையாண்டு தேர்வுகளை எழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். பள்ளிக்கு முழுவதுமாக வராத மாணவர்களுக்கு மட்டுமே தேர்ச்சி முடிவுகள் இல்லை.
அரசு பள்ளிகளில் 1, 6 மற்றும் 9ம் வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 17ம் தேதி முதல் தொடங்கும். 11ம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 24ல் நடைபெறும்.”
மத்திய அரசு டிசம்பர் மாதம் வரை பள்ளிகள் திறக்க வாய்ப்பு இல்லை என்று அறிவித்துள்ள நிலையில், தமிழக அரசின் நிலைப்பாட்டை கேட்டதற்கு, அவர் “கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் இன்னும் தணியவில்லை. இதனால் தற்போது பள்ளிகளை திறக்க சாத்தியமே இல்லை. கொரோனா தாக்கம் குறைந்ததும் மாணவர்களின் பெற்றோர்கள், கல்வியாளர்கள் ஆகியோரின் கருத்துகளை கேட்டு ஆலோசித்து பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார்.” என்று தெரிவித்துள்ளார்.