74வது சுதந்திர தினத்தையொட்டி செங்கோட்டையில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி!

நாட்டின் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் 21 குண்டுகள் முழங்க 7-வது முறையாக பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து, தொடர்ந்து ஏழாவது ஆண்டாக நாட்டு மக்களுக்கு உரையாற்றியுள்ளார். அவரது உரையின்போது, “சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகத்தை நினைவுகூரும் நாளே சுதந்திர தினம். சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகள், வீரர்களை வணங்குவதற்கான சந்தர்ப்பம் இது. நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். எல்லையில் உள்ள பாதுகாப்பு வீரர்களுக்கு என் இதயப்பூர்வமான நன்றி! இந்தியர்கள் ஒருபோதும் தியாகத்திற்கு அஞ்சியதில்லை. ஒரே நாடு என்ற ஒற்றுமையுடன் நாம் சாவல்களை வெல்வோம்.
கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன். கொரோனாவிற்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம். கொரோனாவுக்கு எதிராக போராடும் முன்களப் பணியாளர்களுக்கு நன்றி. நம் நாட்டிற்காக போராடி கொண்டிருக்கும் முன்கள பணியாளர்களுக்கு என் வீர வணக்கம். கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியா நிச்சயம் வெற்றிபெறும். கொரோனா காலத்தில் எண்ணிலடங்காத வென்டிலேட்டர்களை இந்தியாவில் உருவாக்கியிருக்கிறோம்.

சொந்தக் காலில் நிற்கும்படி பிள்ளைகளுக்கு பெற்றோர் அறிவுரை கூறுவதுண்டு. இன்று நாம் சுயசார்புடன் சொந்தக் காலில் நிற்கும் வலிமை பெற்றுள்ளோம். உலகம் இந்தியாவிடம் நிறைய எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளது. தனது ஆன்ம பலத்தால் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
அடுத்த 2 ஆண்டுகள் எப்படி முன்னேற வேண்டும் என உறுதிமொழி எடுக்க வேண்டும். சுயசார்பு இந்தியா என்ற கனவு மிக விரைவில் நிறைவேறும். நமது கலாச்சாரம் பாரம்பரியத்துக்கு மிகப்பெரும் வரலாறு உள்ளது. சுயசார்பு பாரதம் என்ற லட்சியம் மெய்ப்படும். நம்முடைய கனிமவளங்களை கொண்டு நாமே உற்பத்தியும் செய்ய வேண்டும். ஒவ்வொரு இந்தியனின் தாரக மந்திரமாக சுயசார்பு பாரதம் இருக்கிறது. கொரோனா பாதிப்புக்கு மத்தியிலும் சுயசார்பு இந்தியா என்ற இலக்கை நோக்கி நகர்கிறோம். சுயசார்பு என்பது இன்றைய சூழலில் கட்டாயம் ஆகிவிட்டது. உள்ளூர் தயாரிப்புகளுக்கு அனைவரும் சேர்ந்து குரல் கொடுப்போம்.

நாட்டின் 75வது சுதந்திர தின விழா மிக பிரம்மாண்டமாக இருக்கும். இந்தியாவின் ஒற்றுமை உலகுக்கே ஒரு பாடம். இந்திய விவசாயிகள் உலகுக்கு எடுத்துக்காட்டாக உள்ளனர். நம்முன் பல்வேறு சவால்கள் உள்ளன, அவற்றை தாண்டி வெற்றி பெறும் சக்தி நம்மிடம் உள்ளது. இந்தியா விரைவில் தன்னிறைவு பெறும். உலகை வழிநடத்தக் கூடிய இடத்தில் இந்தியா வர வேண்டும். இன்று உலக நாடுகள் இந்தியாவை நம்பிக்கையுடன் பார்க்கின்றன. கொரோனா வெள்ளம் உள்ளிட்ட பல பிரச்சனைகளை நாடு சந்தித்து வருகிறது. கொரோனா காலத்தில் 80 கோடி இந்தியர்களுக்கு இலவசமாக உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.
புதிய கல்விக் கொள்கைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்திய குடிமக்களை உலக குடிமக்களாக மாற்றுவதே நமது இலக்கு. இந்திய வேர்களுடன் நமது மாணவர்கள் உலக குடிமக்களாக மாறுவார்கள். நடுத்தர வர்க்க மக்கள் நமது மிகப்பெரிய பலமாக உள்ளனர். இந்தியா நடுத்தர வர்க்க மக்களின் நலன்கள் மீது கவனம் செலுத்த வேண்டியது அவசியம். நடுத்தர வர்க்க மக்களுக்காக புதிய வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். நடுத்தர வர்க்க மக்களின் கனவை நிறைவேற்ற ரூ.25 ஆயிரம் கோடி ஒதுக்கப்படுகிறது.
விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட வேண்டும். விவசாயிகளின் செலவுகளை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. விவசாயிகளின் உற்பத்திகளை பன்னாட்டு சந்தைக்கு கொண்டு செல்ல வேண்டும். நாட்டின் எந்தவொரு பகுதியும் பின்தங்கிவிடக் கூடாது. முப்படைகளிலும் நிரந்தரமாக பணியாற்றும் வாய்ப்பு பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஜன்தன் திட்டத்தின் கீழ் 22 கோடி பெண்களுக்கு வங்கி கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.

தேசிய டிஜிட்டல் சுகாதார திட்டம் விரைவில் தொடங்கப்படும். இந்த திட்டத்தின்கீழ், அனைத்து குடிமக்களுக்கும் ஹெல்த் ஐடி கார்டு வழங்கப்படும். இது சுகாதார கட்டமைப்பில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் திட்டம். கொரோனா தடுப்பு மருந்து விரைவில் நாட்டு மக்கள் அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்வோம். தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணிகளில் நிபுணர்கள் கடும் முயற்சி மேற்கொண்டுள்ளனர். மூன்று தடுப்பு மருத்து பரிசோதனைகள் இறுதி கட்டத்தில் உள்ளது. கொரோனா காலத்தில் நாட்டில் 80 கோடி மக்களுக்கு இலவசமாக உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளது.”
இறுதியாக காஷ்மீர் குறித்து பேசிய அவர், “காஷ்மீரில் தொகுதிகள் மறுவரை பணிகள் முடிந்தவுடன் விரைவில் அங்கு தேர்தல் நடத்தப்படும்” என்று பிரதமர் மோடி கூறினார்.