ஒரே நாள்ல இவ்வளவு கோடியா? அரசுக்கு அள்ளிக் கொடுத்த ‘குடி’மகன்கள்!!!

இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 248 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகியுள்ளது.
இன்று சுதந்திர தினம் மற்றும் நாளை ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் இரு நாட்களுக்கும் டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்றே தேவையான மதுப்பாட்டில்களை வாங்க மதுப்பிரியர்கள் டாஸ்மாக் கடைகளில் குவிந்தனர். இதனால் தமிழகம் முழுவதும் நேற்று ஒரு நாளில் டாஸ்மாக் விற்பனை அதிகரித்துள்ளது. கொரோனா ஊரடங்கிற்கு பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டபோது 190 கோடி ரூபாய் வசூலானது.
இரண்டு நாட்கள் விடுமுறை என்பதால் மதுக்கள் முழுவதுமாக விற்று தீர்ந்த நிலையில், ஒருநாள் வசூல் ரூ.248 கோடியாக உள்ளது. பண்டிகை நாட்கள் தவிர்த்த டாஸ்மாக் விற்பனை இலக்கில் இது மிகவும் அதிகமாகும்.
அதிகபட்சமான மதுவிற்பனை மண்டலம் வாரியாக எடுத்த கணக்கெடுப்பில், மதுரை – 56.45 கோடி, திருச்சி – 55.77 கோடி, சேலம் – 54.60 கோடி, கோவை – 49.78 கோடி மற்றும் சென்னை – 31.80 கோடி என வசூலாகியுள்ளது.