“தலைமையின் ஒப்புதல் இல்லாமல், தனிப்பட்ட கருத்துகளைத் தெரிவிக்க கூடாது” அறிக்கை வெளியிட்ட ஓபிஎஸ் – இபிஎஸ்!!

சமீப காலமாக அதிமுக கட்சியின் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்பது தான் அக்கட்சியின் மிகப்பெரிய கேள்வியாக இருந்து வந்தது. அக்கட்சியின் ஓவ்வொரு அமைச்சர்களும் விதவிதமான கருத்துக்களை செய்தியாளர்களிடம் தெரிவித்து வந்தனர்.
இந்த சூழ்நிலையில் தற்போது அக்கட்சியின் மூத்த அமைச்சர்களான முதல்வர் பழனிசாமியும், துணைமுதல்வர் ஓ. பன்னீர்செல்வமும் சேர்ந்து கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அதில் “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் மகத்தான மக்கள் இயக்கத்தின் உடன்பிறப்புகள் அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள். இந்த இனிய நாள் நம் முன்னோர்களின் தியாகத்தாலும், உழைப்பாலும், தன்னலமற்ற தொண்டினாலும் மலர்ந்த பொன்னாளாகும்.
நாம் அனைவரும் ஒருதாய் மக்கள். “எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு, நாம் எல்லோரும் சமம் என்பது உறுதியாச்சு” என்ற ஜனநாயகக் கொள்கையை நமக்கு வழங்கிய நாள் இந்த நாள். நம் நாடு பெற்ற சுதந்திரமும், அரசியல் சாசனம் தந்த மக்களாட்சித் தத்துவமும் ஏழை, எளிய, உழைக்கும் மக்களின் உயர்வுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தின் பிடியிலோ, ஒரு குறிப்பிட்ட குழுவின் கைகளிலோ, வலிமை பெற்றவர்களின் கரங்களிலோ இந்த மக்களாட்சி முடங்கிவிடக் கூடாது என்பதற்காக எம்.ஜி.ஆர். உருவாக்கிய இயக்கம் நமது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற மாபெரும் மக்கள் இயக்கம்.
எம்.ஜி.ஆர். தமிழ் மக்கள் மீது கொண்ட பேரன்பினாலும், தமிழக மக்கள் எம்.ஜி.ஆர். மீது கொண்ட பாசத்தினாலும், நம்பிக்கையினாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உருவானது. ஜெயலலிதா 35 ஆண்டுகள் தனது உழைப்பையும், அறிவையும் இந்த இயக்கத்திற்காக வழங்கி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஒப்பற்ற அரசியல் இயக்கமாக வளர்த்ததோடு, நம்மையெல்லாம் ஆளாக்கி, நம் கைகளில் தமிழ்நாடு அரசின் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்துச் சென்றிருக்கிறார்கள்.
கடந்த நான்கு ஆண்டுகளாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தையும், கழக ஆட்சியையும், எப்படி மாற்றாரும் பாராட்டும் வண்ணம் வழிநடத்தினோமோ அதைப் போலவே, இனிவரும் காலங்களிலும் சிறப்புற ஆட்சி நடத்தி மீண்டும் ஒரு தொடர் வெற்றியைப் பெற நாம் அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டிய நேரமிது.
கடந்த சில நாட்களாக கழக நிர்வாகிகளில் சிலர் எந்தப் பின்னணியும் இன்றி கூறிய சில கருத்துகள் மாற்றாருக்கு பெரும் விவாதப் பொருளாக மாறிவிட்டன. அத்தகைய நிலை மீண்டும் ஏற்படாவண்ணம் ஜெயலலிதா காலத்தில் இருந்ததைப் போன்று ராணுவ கட்டுப்பாட்டுடன் தலைமையின் முடிவுக்குக் கட்டுப்பட்டு செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். கட்சியின் அனைத்து முக்கிய கொள்கை முடிவுகளையும், கூட்டணி குறித்த நிலைப்பாடுகளையும், ஜெயலலிதா காட்டிய வழியில் ஜனநாயக ரீதியில் கழகத்தின் தலைமை விரிவாக ஆலோசித்து, கழகத் தொண்டர்களின் மன உணர்வுகளை எதிரொலிக்கும் வகையில் சிறப்பான முடிவுகளை மேற்கொள்ளும்.
எனவே, சிறு சலசலப்புகளுக்கும் இடம் தராமல் நம்மை வீழ்த்த நினைப்போரின் பேராசைகளுக்கு வாய்ப்பளிக்காமல், ஒன்றுபட்டு உழைத்திட உங்களையெல்லாம் அன்போடு கேட்டுக்கொள்கிறோம். கழக உடன்பிறப்புகள் மக்கள் பணிகளிலும், கழகப் பணிகளிலும் மட்டுமே கவனம் செலுத்துங்கள். கழகத்தை வெற்றிச் சிகரத்திற்கு இட்டுச்செல்ல உங்கள் பணிகள் மிகவும் இன்றியமையாதவை.
அனைத்து நிலைகளிலும் செயல்பட்டு வரும் கழகப் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட அனைவரும், எந்தவித முன்யோசனையும் இன்றி, கழகத் தலைமையின் ஒப்புதல் இல்லாமல், தொலைக்காட்சிகள் உள்ளிட்ட இன்னபிற ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும், தங்களின் தனிப்பட்ட கருத்துகளைத் தெரிவிப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இதை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
கருத்துப் பரிமாற்றங்களை செய்வதன்மூலம் நாம் எதையும் சாதிக்கப் போவதில்லை. எனவே, ஊடக விவாதங்களில் கழக அரசின் சாதனைகளைப் பற்றியும், மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக, கழக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களைப் பற்றியும் எடுத்துச் சொல்லுங்கள். மக்கள் என்றைக்கும், எம்.ஜி.ஆர். மீதும், ஜெயலலிதா மீதும் பேரன்பு கொண்டவர்களாக இருக்கிறார்கள். அந்த அன்பினை நாமும் பெற்றிருக்கிறோம் என்பதே திண்ணம். நாளை நமதே ! வெற்றி நமதே !” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.