முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கொரோனாவுக்கு மரணம் – மோடி இரங்கல்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரும், உ.பி., முன்னாள் அமைச்சருமான சேத்தன் சவுகான் (73) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இன்று (ஆக., 16) உயிரிழந்தார்.
சேத்தன் சவுகானுக்கு கடந்த ஜூலை மாதம் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தொற்று அவரது சிறுநீரகத்தை பாதித்து, ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தியது. இதனால் குருகிராமில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். வெள்ளியன்று அவர் உடல்நிலை மோசமடைந்ததால் உயிர் காக்கும் கருவிகளின் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மாலை அவர் உயிரிழந்தார்.
சேத்தன் சவுகான் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர், ஒரு அற்புதமான கிரிக்கெட் வீரராகவும், கடுமையாக உழைக்கக் கூடிய அரசியல் தலைவராகவும் விளங்கியவர். மக்கள் சேவையிலும், உ.பியில் பா.ஜ.கவை வலுப்படுத்தியதிலும் அவரது பங்கு முக்கியமானது என தெரிவித்துள்ளார்.
1969 முதல் 1978 வரையிலான காலக்கட்டத்தில் இந்திய அணிக்காக 40 டெஸ்ட் போட்டிகளில் ஆடி, 16 அரைசதம், 2 விக்கெட்டுகள் என 2,084 ரன்கள் குவித்துள்ளார். கவாஸ்கருடன் இணைந்து சவுகான் இந்தியாவுக்கு வலுவான தொடக்க கூட்டணியை உருவாக்கியவர். இந்த கூட்டணி 3 ஆயிரம் ரன்களுக்கு மேல் எடுத்துள்ளது. பின்னர் பா.ஜ.க.,வில் இணைந்த இவர் உத்தரபிரதேசத்தின் அம்ரோஹாவிலிருந்து மக்களவைக்கு 1991 மற்றும் 1998 ஆகிய இரு முறை தேர்வாகியுள்ளார். கடந்த ஆண்டு வரை உ.பியில் யோகி ஆதித்யநாத் ஆட்சியில் அமைச்சராக இருந்துள்ளார்.