சென்னையில் தீபாவளியின்போது அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக 428 வழக்குகள் பதிவு!!

தீபாவளியின்போது அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக சென்னையில் 428 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், முழுவதும் 106 இடங்களில் பட்டாசு தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளன.
தீபாவளியை முன்னிட்டு, காலை 6 மணி முதல் 7 மணி வரை, இரவு 7 மணி முதல் 8 மணி வரை என 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க நீதிமன்றம் கட்டுப்பாடு விதித்திருந்தது. இதையடுத்து, அனுமதித்த நேரத்தை மீறி பட்டாசு வெடிப்பவர்களைக் கண்காணிக்க காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் போலீஸாருக்கு உத்தரவிட்டார். அதன்படி, அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டிருந்தது. தனிப்படை போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதையடுத்து நீதிமன்றம் வரையறுத்த நேரத்தை மீறி மற்ற நேரங்களில் பட்டாசு வெடித்தது தொடர்பாக, பெருநகர காவல் வடக்கு மண்டலத்தில் 37 வழக்குகளும், தெற்கு மண்டலத்தில் 95 வழக்குகளும், கிழக்கு மண்டலத்தில் 57 வழக்குகளும், மேற்கு மண்டலத்தில் 239 வழக்குகளும் என மொத்தம் 428 வழக்குகள் புதிவு செய்யப்பட்டுள்ளன.
இதேபோல், கடந்த 2019-ம்ஆண்டு தீபாவளி தினத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்தது தொடர்பாக 204 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் கடந்த 14-ம் தேதி இரவு, பட்டாசு வெடிக்கும்போது 106 இடங்களில் தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளன.
இதில், சென்னையில் 38 பேர் காயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.