பில்லி சூனியம் வைத்த இருவரின் தலையை துண்டாக வெட்டி, தீ வைத்து எரிப்பு!!

அசாம் மாநிலம் கர்பி அங்லாங்க் மாவட்டம், ரோஹிமாபூர் கிராமத்தில் ரமாவதி ஹல்லு என்ற பெண்ணும், பிஜோய் கவுர் என்பவரும் பில்லி சூனியம், மாந்திரிகம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. நள்ளிரவு தாண்டி இவர்கள் மயானத்தில் ரகசிய பூஜைகள் நடத்தி வந்தனர். இந்நிலையில், கடந்த 29ம் தேதி ராஷ்மி கவுர் என்ற சிறுமி உடல் நலம் பாதிக்கப்பட்டார்.
ரமாவதி, பிஜோய் வைத்த பில்லி சூனியத்தால் தான் தனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக அந்த சிறுமி கூறியதாக தெரிகிறது. அடுத்த நாளே திடீரென அவர் உயிரிழந்தார். அதன் பிறகு மற்றொரு சிறுமியும் பில்லி சூனியத்தால் தனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டிருப்பதாக கூறி உள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த கிராமமக்கள், பில்லி சூனிய ஜோடியை சரமாரியாக தாக்கி உள்ளனர். மேலும், சிறுமி ராஷ்மியின் சடலம் புதைக்கப்பட்ட மயானத்தில் வைத்து, இருவரின் தலையை துண்டாக வெட்டி, தீ வைத்து எரித்துள்ளனர்.
இது குறித்து கிராமத்தை சேர்ந்த சிலர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். டோக்மோகா காவல் நிலைய போலீசார் கிராமத்தில் விசாரணை நடத்தி 2 பெண்கள் உட்பட 9 பேரை கைது செய்துள்ளனர். கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தலைமறைவாக உள்ள சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.