“அலெக்ஸி நவல்னி ரஷியாவுக்குத் திரும்புவது வரவேற்கத்தக்கது” – ரஷியா

ரஷிய அதிபர் புதினை கடுமையாக விமர்சித்து வந்தவர் ரஷிய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி. இவர் விமானத்தில் பயணிக்கும்போது திடீரென சுகவீனமடைந்தார். அவர் தேநீரில் விஷம்கலக்கப்பட்டதாக குற்றம்சாற்றப்பட்டது.
ரஷியாவின் எதிர்ப்புக்கிடையே ஜெர்மனிக்கு கொண்டுவரபட்ட நவல்னிக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு நோவிச்சோக் என்ற நரம்பு மண்டலத்தை பாதிக்கும் விஷம் கொடுக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
நவல்னிக்கு விஷம் கொடுக்கப்பட்டதன் பின்னணியில் இருப்பது ரஷிய அரசுதான் என்று குற்றம்சாட்டப்பட்டது. ஆனால் தற்போது ரஷியாவோ புதுக்கதை ஒன்றை சொல்லியிருக்கிறது.
அதாவது, நவல்னி விமானத்தில் பயணிக்கும்போது ஒரு அழகிய இளம்பெண் அவருடன் இருந்ததாகவும், அந்த பெண்தான் அவருக்கு விஷம் கொடுத்ததாகவும் ரஷியா பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளது.
இதற்கிடையில் கொஞ்சம் கொஞ்சமாக உடல் நலம் முன்னேறி வரும் நவல்னி, மருத்துவமனையில் தன் அறை முன்பு உள்ள பால்கனியில் தன் மனைவியுடன் அமர்ந்து தேநீர் அருந்தும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
செப்டம்பர் 15 ஆம் தேதி, நவல்னியின் செய்தித் தொடர்பாளர் கிரா யர்மிஷ், நவல்னி ரஷியாவுக்குத் திரும்புவார் என்பதை உறுதிப்படுத்தினார்.
எதிர்க்கட்சித் தலைவர் ஜெர்மன் மருத்துவமனையில் இருந்து குணமாகி திரும்புவதை தொடர்ந்து, ரஷியாவின் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி ரஷியாவுக்குத் திரும்புவது வரவேற்கத்தக்கது என ரஷியா புதன்கிழமை அறிவித்தது.