வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தி கொண்டாடுங்கள் – அரசு அறிவுரை!

தமிழகத்தில் நிலவிவரும் கொரோனா சூழல் காரணமாக கூட்டு வழிபாடுகள் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே அவரவர் வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தியை கொண்டாட வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கடந்த ஜூலை 29-ம் தேதி பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் மத்திய உள்துறை அமைச்சகம், மதம் சார்ந்த விழாக்கள், கூட்டு வழிபாடுகள் ஆகியவற்றை நாடு முழுவதும் தடை செய்தது.
மத்திய அரசின் வழிகாட்டுதல் படியும், தமிழக கொரோனா சூழலை கருத்தில் கொண்டும், பொது இடங்களில் விநாயகர் சிலை அமைத்து வழிபடுவது, ஊர்வலமாக கொண்டு சென்று நீர்நிலைகளில் கரைப்பது போன்றவை ஏற்கனவே தடை செய்யப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த நீதிபதிகளும் அரசாணையை பின்பற்ற உத்தரவிட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் அவரவர் வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தியை கொண்டாட அறிவுறுத்துகிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.