“ஸ்டாலின் கூறுவது, சட்டத்திற்குட்பட்ட கருத்து அல்ல. இந்த கருத்து நீதிமன்ற அவமதிப்பு” – பா.ஜ., மாநில துணைத் தலைவர், அண்ணாமலை

”தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், நீட் தேர்வை ரத்து செய்வதாக ஸ்டாலின் கூறுவது, சட்டத்திற்குட்பட்ட கருத்து அல்ல. இந்த கருத்து நீதிமன்ற அவமதிப்பாகும்,” என, பா.ஜ., மாநில துணைத் தலைவர், அண்ணாமலை தெரிவித்தார்.
சென்னையில், அவர் அளித்த பேட்டி: ‘நீட்’ தேர்வு நாடு முழுவதும் நடக்கிறது; தமிழகத்தில் மட்டும் எதிர்ப்பு உள்ளது. கடந்த, 2013ல் நீட் தேர்வு ஆலோசனை நடந்தபோது, டில்லியில் இருந்த அரசு, கூட்டணியில் இருந்த கட்சிகள் குறித்து பேச வேண்டும். தற்போது, நான்கு ஆண்டுகள் கழித்து, நீட் தொடர்பாக பேசுகிறோம். இதற்கு, பிரதமர் மோடி பொறுப்பேற்க வேண்டும் என்பது ஏற்புடையதல்ல.
தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், நீட் தேர்வை ரத்து செய்வதாக, ஸ்டாலின் கூறுவது, சட்டத்திற்கு உட்பட்ட கருத்து அல்ல.இது, நீதிமன்ற அவமதிப்பு. அவர் இப்படி கூறாமல் தவிர்த்திருக்கலாம். நீட் தேர்வு தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு சென்றபோது, மாநில சுயாட்சி குறித்தெல்லாம் விவாதிக்கப்பட்டது. அனைத்தையும் ஆராய்ந்து, உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நீட் தேர்வு மாநில சுயாட்சிக்கு எதிரானதல்ல.
காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் கூட, நீட் தேர்வுக்கு எதிர்ப்பு இல்லை. தமிழகத்தில் மட்டுமே எதிர்ப்பு உள்ளது. கல்வி வணிகமாக மாறியதை உடைக்கத்தான், புதிய கல்விக் கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளது. இதுகுறித்து, யாருடனும் விவாதிக்க தயாராக உள்ளேன். இவ்வாறு, அண்ணாமலை கூறினார்.