முதல்வர் பழனிசாமியின் தாயார் மறைவுக்கு தமிழக தலைவர்கள் இரங்கல்!!!

முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியின் தாயார் உடல்நலக் குறைவு காரணமாக இன்று அதிகாலை காலமானார். அவரது மறைவுக்கு தமிழக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவசாயி அம்மாள் (93), உடல்நலக் குறைவால் காலமானார். சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தது. தகவல் அறிந்ததும், முதலமைச்சர் பழனிசாமி உடனடியாக சாலை மார்க்கமாக சேலம் புறப்பட்டுச் சென்றார்.
முதலமைச்சரின் தாயார் உடலுக்கு அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் உறவினர்கள் அனைவரும் அஞ்சலி செலுத்தினர். மேலும் அவரின் மறைவிற்கு தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இந்தநிலையில் மறைந்த முதலமைச்சரின் தாயார் உடல் அவரின் வீட்டிலிருந்து ஊர்வலமாக மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. சேலம் மாவட்டத்தில் உள்ள சிலுவம்பாளையத்தில் இருக்கின்ற மயானத்தில் உறவினர்களின் இறுதி அஞ்சலிக்குப் பிறகு அவரின் உடல் தகனம் செய்யப்பட்டது.
மாண்புமிகு முதல்வர் அவர்களின் அன்புத்தாயார் திருமதி.தவுசாயம்மாள் அவர்கள் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும் மனவேதனையும் அடைந்தேன். தாயாரது பிரிவால்வாடும் மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். pic.twitter.com/WVAtRt7JCs
— O Panneerselvam (@OfficeOfOPS) October 13, 2020
துனை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திகுறிப்பில்: “முதல்வரின் அவர்களின் அன்புத்தாயார் திருமதி.தவுசாயம்மாள் அவர்கள் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும் மனவேதனையும் அடைந்தேன். தாயாரது பிரிவால் வாடும் மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
முதலமைச்சர் திரு.பழனிசாமி அவர்களின் தாயார் திருமதி.தவசாயி அம்மாள் மறைவெய்திய செய்தியால் மனவேதனைக்கு உள்ளானேன்.
அவரைத் தொடர்புகொண்டு ஆறுதல் தெரிவித்தேன்.
அன்புமிக்க அன்னையை இழந்து வாடும் @CMOTamilNadu, குடும்பத்தினர்க்கு எனது ஆழ்ந்த அனுதாபமும் ஆறுதல்களும்! pic.twitter.com/qnZfbvZaC1
— M.K.Stalin (@mkstalin) October 13, 2020
இது குறித்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் இரங்கல் செய்தியில், “தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் அவர்கள் தனது 93-ஆவது வயதில் மறைவெய்தினார் என்ற துயரச் செய்தி கேட்டு மிகுந்த மனவேதனைக்கு உள்ளானேன். அவரது மறைவிற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அன்புமிக்க அன்னையை இழந்து வாடும் முதலமைச்சர் அவர்களுக்கும், குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
பா.ம.க நிறுவனர் ராமதாஸ் இரங்கல் அறிக்கையில், “தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் தாயார் தவசாயி அம்மாள் உடல்நலக் குறைவால் சேலத்தில் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். தவசாயி அம்மாள் அவர்களை இழந்து வாடும் அவரது புதல்வர் முதலமைச்சர் பழனிசாமி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.