“கிசான் திட்டத்தில் முறைகேடு தொடர்பாக இதுவரையில் ரூ.72 கோடி மீட்கப்பட்டுள்ளது” – அமைச்சர் துரைக்கண்ணு

பிரதமர் கிசான் திட்டத்தில் முறைகேடு தொடர்பாக இதுவரையில் ரூ.72 கோடி மீட்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் துரைக்கண்ணு தெரிவித்துள்ளார்.
தஞ்சையில், வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு நிருபர்களிடம் கூறியதாவது:-
கொரோனா காலக்கட்டத்தில் சில இடைத்தரகர்கள், கம்ப்யூட்டர் சென்டர்கள் மூலம் பிரதமர் கிசான் திட்டத்தில் சில முறைகேடுகள் நடந்து அது கண்டறியப்பட்டு அந்த பணம் மீட்கப்பட்டு அரசு வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பான வழக்கு காவல்துறை வசம் ஒப்படைக்கப்பட்டு இதுவரை ரூ.72 கோடி மீட்கப்பட்டுள்ளது.
தவறாக பெறப்பட்ட தொகையை திரும்ப பெற கடுமையான நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது. போலீசார் மூலம் கைது நடவடிக்கையும், துறை ரீதியாக நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. பலர் பணி நீக்கமும், தற்காலிக பணி நீக்கமும் செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதன் மூலம் பிரதமர் கிசான் திட்டத்தில் முறைகேடுகள் களையப்பட்டு வருகிறது.
மத்திய அரசின் வேளாண் சட்ட மசோதாக்களால் விவசாயிகளுக்கு எந்தவித பாதிப்பும் கிடையாது. அதனால் தான் தமிழக அரசு அதனை ஆதரிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.