ஏர் இந்தியா முதலீட்டுக்கு யாரும் வராததால், அரசு புது முடிவு

ஏர் இந்தியா நிறுவனத்தில், அன்னிய நேரடி முதலீடு குறித்த கொள்கையில் செய்யப்பட்டிருக்கும் மாற்றத்தை, மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. இதன்படி, வெளிநாடு வாழ் இந்தியர்கள், ஏர் இந்தியா நிறுவனத்தின், 100 சதவீத பங்குகளையும் வாங்கலாம்.
இதற்கு முன்னர், வெளிநாடு வாழ் இந்தியர்கள், 49 சதவீத பங்குகளை மட்டுமே வாங்க முடியும் என இருந்தது. தற்போது புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஏர் இந்தியா நிறுவனத்தை விற்பதற்கான முந்தைய முயற்சிகள் தோல்வியடைந்ததால், முதலீட்டை ஈர்ப்பதற்காக, விதிமுறைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஏர் இந்தியாவின் ஏலத்திற்கான காலக்கெடு, கொரோனா காரணமாக, ஆகஸ்ட், 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
புதிய விதிப்படி, வெளிநாட்டு முதலீடுகள், ஏர் இந்தியாவில், 49 சதவீதத்திற்கு மிகாமல் இருக்கும். இந்த முதலீட்டு வரம்பை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மீற முடியாது. ஆனால், வெளிநாடு வாழ் இந்தியர்கள், 100 சதவீதம் வரை வாங்குவதற்கு, ரிசர்வ் வங்கி, மத்திய அரசு ஆகியவற்றின் முன் அனுமதியின்றி, முதலீட்டை மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.