“கொரோனாவை கட்டுப்படுத்தாமல், தளர்வுகளை அதிகரிப்பது பேரழிவுக்கு வழிவகுக்கும்” – உலக சுகாதார அமைப்பு!

கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் தளர்வுகள் அளித்து வருவது பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு கோடிக்கணக்கில் அதிகரித்துள்ள நிலையில் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் கடந்த சில மாதங்களாக பல நாடுகள் கடுமையான ஊரடங்கை பின்பற்றி வந்தன. இந்நிலையில் பொருளாதார ரீதியாக நாடுகள் பெரும் வீழ்ச்சியை சந்தித்த நிலையில் தற்போது பல நாடுகள் ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து வருகின்றன.
இவ்வாறாக தளர்வுகளை செய்து வருவது மேலும் ஆபத்தை ஏற்படுத்தும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் கூறுகையில், “பெருந்தொற்று முடிவுக்கு வந்துவிட்டதாக எந்த நாடும் சொல்ல முடியாது. இந்த வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுநோயை கட்டுப்படுத்தாமல் பொருளாதாரத்தை அதிகரிக்க தளர்வுகளை அதிகரிப்பது ‘பேரழிவுக்கான செய்முறை'”என்று டெட்ரோஸ் எச்சரித்துள்ளார்.
இந்தியா உட்பட பல நாடுகள் ஊரடங்கை நீக்கி, கட்டுப்பாடுகளை தளர்த்திக் கொண்டிருக்கும் நேரத்தில் அவரது கருத்துக்கள் கவனிக்கப்படுகின்றன. குறிப்பிடத்தக்க வகையில், இந்தியாவில் இன்று முதல் நான்காவது கட்ட ஊரடங்கு தளர்வு (அன்லாக் 4.0) அமலுக்கு வந்துள்ளது. .
கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நேரத்தில் இந்தியா முழுவதும் கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்தப்பட்டு உள்ளது. கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் ஒரு நாளில் 78,000 க்கும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். முன்னதாக, ஊரடங்கு தடைகளை நீக்கிய பின்பு ஜெர்மனி மற்றும் தென் கொரியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.