“அயோத்தி மசூதி, வக்ப் மற்றும் ஷரியத் சட்டங்களுக்கு எதிரானது” – ஜபாரப் ஜிலானி குற்றச்சாட்டு

”உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் கட்டப்பட உள்ள மசூதி, வக்ப் சட்டம் மற்றும் ஷரியத் சட்டங்களுக்கு எதிரானது,” என, முஸ்லிம் தனிநபர் சட்ட வாரிய உறுப்பினர் ஜபாரப் ஜிலானி கூறியுள்ளார்.
உ.பி., மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கை விசாரித்த, உச்ச நீதிமன்றம், ‘அங்கு ஹிந்துக் கடவுள் ராமருக்கு கோவில் கட்டலாம்’ என, தீர்ப்பு அளித்தது. மேலும், அங்கிருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டதால், அயோத்தியில் வேறொரு இடத்தில், 5 ஏக்கர் நிலம் ஒதுக்க, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, அயோத்தியின் தானிபுர் கிராமத்தில் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு அமைய உள்ள மசூதி, மருத்துவமனைகளின் மாதிரி வரைபடம் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், முஸ்லிம் தனிநபர் சட்ட வாரிய உறுப்பினர், ஜாபரப் ஜிலானி கூறியுள்ளதாவது: வக்ப் சட்டத்தின் படி, மசூதி அல்லது மசூதிக்கான நிலம், பண்டமாற்று முறையில் இருக்கக் கூடாது. அயோத்தியில் அமைய உள்ள மசூதி, இந்த சட்டத்தை மீறுகிறது. மேலும், இது ஷரியத் சட்டத்தையும் மீறுவதாக உள்ளது. அரசின் நெருக்கடிக்கு பயந்து, உத்தர பிரதேச சன்னி வக்பு வாரியம் செயல்படுகிறது. இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
பல்வேறு முஸ்லிம் தலைவர்களும் இந்தக் கருத்தை கூறியுள்ளனர். இதை, மசூதி அமைப்பதற்காக, உத்தர பிரதேச மாநில சன்னி வக்பு வாரியம் அமைத்துள்ள, இந்தோ – இஸ்லாமிய கலாசார அறக்கட்டளையின் செயலர், அத்தார் ஹூசைன் மறுத்துள்ளார்.
”ஷரியத் சட்டங்களை அவரவர் தங்களுக்கு ஏற்றார்போல் திரித்து கூறுகின்றனர். உச்ச நீதி மன்ற உத்தரவின்படி, இந்த நிலம் வழங்கப்பட்டுள்ளது. அது எப்படி சட்டவிரோதமாகும். ”மேலும், மசூதி என்பது, வழிபாடு செய்வதற்கான இடம். இந்த இடத்தில் மசூதி கட்டுவது எப்படி தவறாகும்,” என, அத்தார் ஹூசைன் கேள்வி எழுப்பியுள்ளார்.