‘கல்வான் பகுதியை ஏன் அறிக்கையில் குறிப்பிடவில்லை?’; மத்திய அரசுக்கு ராகுல் கேள்வி

கால்வான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளில், முன்பிருந்த இருந்த நிலையே தொடர வேண்டும் என, இந்தியா ஏன் வலியுறுத்தவில்லை என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்
இந்தியாவுக்கு சொந்தமான கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இருந்து, சீனா தனது துருப்புக்களை திரும்பப் பெற்றது தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை அறிக்கை வெளியிட்டது. இதில் சொல்லப்பட்ட விஷயங்கள் குறித்து, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பல கேள்விகளை எழுப்பியுள்ளார். அவர் இதுதொடர்பாக கூறியதாவது:-
இந்திய வெளியுறவுத் துறை வெளியிட்ட அறிக்கையில், கால்வான் பள்ளத்தாக்கில் நமக்குள்ள இறையாண்மை பற்றிய தகவல்களை தெளிவாக குறிப்பிடாதது ஏன்? கால்வான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளில், முன்பிருந்த இருந்த நிலையே தொடர வேண்டும் என ஏன் இந்தியா வலியுறுத்தவில்லை? நமது மண்ணில் ஊடுருவி, ஆயுதங்களற்ற 20 இந்திய ராணுவ வீரர்களை படுகொலை செய்த சீனாவை, தனது நிலைப்பாட்டை நியாயப்படுத்த அனுமதித்தது ஏன்? தேச நலனை காப்பது இந்திய அரசின் தலையாய கடமை.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.