தங்க கடத்தலில் தேடப்பட்டு வந்த ஸ்வப்னா கைது!

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயர் ஆகியோரை தேசிய புலனாய்வு ஆணையம் (NIA), பெங்களூருவில் வைத்து கைது செய்தது.
திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் சமீபத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.15 கோடி மதிப்பிலான 30 கிலோ கடத்தல் தங்கம் சிக்கியது. அரபு எமிரேட்ஸ் தூதரக அலுவலக முன்னாள் ஊழியர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இந்த வழக்கில் தூதரக முன்னாள் ஊழியர் சரித்குமார், அவரது கூட்டாளி சந்தீப் நாயரின் மனைவி சௌமியா ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு உள்ளனர். முக்கிய தொடர்புடையவராக கருதப்படும் ஸ்வப்னா தலைமறைவாக இருந்தார்.
இந்த நிலையில், பெங்களூரில் குடும்பத்தினருடன் பதுங்கி இருந்த ஸ்வப்னாவை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஸ்வப்னாவின் செல்போன் பேச்சுக்களை ட்ராக் செய்த என்ஐஏ அதிகாரிகள் அவரை மோப்பம் பிடித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு குற்றவாளியான சந்தீப் நாயரையும் என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சந்தீப் மற்றும் ஸ்வப்னா ஆகிய இருவரையும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் திங்கட்கிழமையன்று விசாரணைக்கு எடுக்க என்ஐஏ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். விசாரணைக்குப் பின்னர் இந்த தங்கக் கடத்தல் வழக்கில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்பது தெரியவரும்