‘ஆன்லைன்’ வகுப்புகள் – தனியார் பள்ளிகள் விதிகளை பின்பற்றுகிறதா? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

தனியார் பள்ளிகளில், ஆன்லைன் வகுப்புகளுக்கான விதிமுறைகள் எவ்வாறு பின்பற்றப்படுகின்றன என்பது குறித்து அறிக்கை அளிக்க, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை கோரிய வழக்குகள், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு, நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.
அப்போது, தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகளுக்கான விதிமுறைகள் எவ்வாறு பின்பற்றப்படுகின்றன என்பது குறித்தும், அதனை கண்காணிக்கும் வழிமுறைகள் குறித்தும் விளக்கமளிக்க, தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மலைவாழ் பகுதி மாணவர்களுக்கு எவ்வாறு கல்வி அளிக்கப் போகிறீர்கள் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், பெரும்பாலான குடும்பங்களில் ஒரே ஒரு செல்போன் இருக்கும் என்பதால், தனியார் பள்ளிகளில், வகுப்புகளை பதிவு செய்து இணையதளத்தில் வெளியிட முடியுமா என்பது குறித்தும் விளக்கமளிக்க அரசு தரப்புக்கு உத்தரவிட்டனர்.
அரசுத் தரப்பில் விரிவான அறிக்கை அளிப்பதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து, வழக்கு விசாரணை வரும் 27-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.