ஐ.பி.எல்.: குட் பை சொன்னது ‘விவோ’

இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல்., 20-20 டைட்டில் ஸ்பான்சரில் இருந்து சீனாவின் விவோ நிறுவனம் வெளியேறியது.
ஐ.பி.எல்., டி-20 லீக் போட்டிகளை பிசிசிஐ நடத்தி வருகிறது. 2022-ம் ஆண்டு வரையிலான போட்டிகளுக்கு சீன நிறுவனமான விவோ ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சரை பெற்றிருந்தது. 2 ஆயிரத்து 199 கோடி ரூபாய்க்கான இந்த ஒப்பந்தத்தின் மூலம் வருடத்திற்கு 400 கோடி ரூபாய் வரை பிசிசிஐ-க்கு வருமானம் கிடைத்து வந்தது.

லடாக் மோதலுக்குப் பிறகு சீன தயாரிப்பு பெருட்களையும், சீன நிறுவனங்களையும் புறக்கணிக்க வேண்டும் என இந்தியா வலியுறுத்தி வருகிறது. அந்த அடிப்படையில் சீன செயலிகளான டிக்-டாக் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட செயலிகளை இந்தியா தடை செய்தது. மேலும் சீனாவுடனான பல தொழில் ஒப்பந்தங்களும் ரத்து செய்யப்பட்டன.
எனினும் அண்மையில் நடைபெற்ற ஐபிஎல் ஆட்சி மன்றக்குழுவில் ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சரான விவோ உள்ளிட்ட சீன ஸ்பான்சர்கள் தொடரும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், திடீர் திருப்பமாக, ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சரில் இருந்து விவோ நிறுவனம் விலகியுள்ளது. இதனால், பி.சி.சி.ஐ.,க்கு மிகப்பெரிய அளவில் நிதி நெருக்கடி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.