தாதா தாவூத் வீட்டை இடிக்காமல், நடிகை கங்கனா வீட்டை இடிப்பதேன்? சிவசேனா அரசிடம் பட்னாவிஸ் கேள்வி!

மும்பை நிழல் உலக தாதா தாவூத் வீட்டை இடிக்காமல், நடிகை கங்கனா வீட்டை மாநில அரசு இடிக்கிறது என பா.ஜ.,வை சேர்ந்த முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.
சமீபத்தில் விதிமுறைகளை மீறி நடிகை கங்கனாவின் அலுவலகம் கட்டப்பட்டிருப்பதாக கூறி மாநில அரசு இடித்தது. இது தொடர்பாக மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் நிருபர்களிடம் கூறியதாவது: கொரோனா வைரசை எதிர்த்து போராடுவதை விட, நடிகை கங்கனா ரணாவத்தை எதிர்த்து போராடுவதே முக்கியம் என மாநில அரசு நினைக்கிறது.
இன்று இந்தியாவிலேயே, கொரோனா பாதித்தவர்கள் மஹாராஷ்டிராவில் தான் உள்ளனர். தினமும் 23 ஆயிரம் முதல் 25 ஆயிரம் பேர் பாதிக்கப்படுகின்றனர். நாட்டில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களில் 40 சதவீதம் பேர் மஹாராஷ்டிராவை சேர்ந்தவர்கள். ஆனால், கொரோனாவை எதிர்த்து மாநில அரசு போராடவிரும்பவில்லை. மாறாக, கங்கனா ரணாவத்துடன் மோதல் போக்கில் ஈடுபட்டு வருகிறது. நடிகையை எதிர்ப்பதில் செலவிட்ட, ஆற்றலை, கொரோனாவுக்கு எதிராக பாதி செலவிட்டிருந்தால், பலரின் உயிரை காப்பாற்றியிருக்கலாம்.
கங்கனா ரணாவத் விவகாரத்தை பா.ஜ.க எப்போதும் எழுப்பியதில்லை. கங்கனா மும்பைக்கு வரக்கூடாது என்று மாநில அரசு சர்ச்சைக்குரிய வகையில் அறிக்கை ஏன் வெளியிட்டது. கங்கனா, அரசியல் தலைவர் இல்லை. இந்த விவகாரத்தை பெரிதுபடுத்தியிருக்கக்கூடாது. மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் வீட்டை இடிக்க செல்ல மாட்டீர்கள். ஆனால் நடிகையின் வீட்டை இடிப்பீர்கள். இது எந்த விதத்தில் நியாயம்?” இவ்வாறு அவர் கூறினார்.