விநாயகர் சிலைகளை பதுக்கியதற்காக பாஜக நிர்வாகியின் வீட்டு அறைக்கு சீல் வைத்த வருவாய்த்துறை அதிகாரிகள்!!

பொது இடங்களில் வைப்பதற்காக விநாயகர் சிலைகளை வைத்திருந்தாகக் கூறி, திருவள்ளூர் பாஜக நிர்வாகி வீட்டு அறைக்கு வருவாய்த் துறை அதிகாரிகள் பூட்டு போட்டனர்.
கொரோனா தொற்றைத் தடுக்கும் விதமாக, விநாயகர் சதுர்த்திக்கு பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்கவும், ஊர்வலம் நடத்தவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில், திருவள்ளூர், லங்காதர தெருவில் வசிக்கும் பாஜக நிர்வாகி செந்தில்குமார், பொது இடங்களில் வைப்பதற்காக விநாயகர் சிலைகளை தன் வீட்டில் வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, திருவள்ளூர் டவுன் போலீஸார் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள், செந்தில்குமார் வீட்டில் சோதனை செய்தனர். சோதனையில், தலா 3 அடி உயரம் உள்ள 3 விநாயகர் சிலைகள் அங்கு இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அந்த சிலைகளை செந்தில்குமாரின் வீட்டில் உள்ள அறையிலேயே வைத்து, அந்த அறைக்கு அதிகாரிகள் பூட்டுப் போட்டுள்ளனர்.