சோப்பு, சிப்ஸ் பாக்கெட்டுகளுக்கு தடை! உற்பத்தியாளர்கள் கண்டனம்

சிப்ஸ், சோப்பு போன்றவற்றை பேக்கேஜிங்(Package) செய்ய பயன்படும் பிளாஸ்டிக்குக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு சிறு குறு உற்பத்தியாளர்களும், வியாபாரிகளும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி 1 முதல், பல்வேறு வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை வந்தது. அதில், பிளாஸ்டிக் ஷீட், பிளேட், டீ மற்றும் தண்ணீர் கப், தண்ணீர் பாக்கெட், ஸ்ட்ரா, கேரி பேக், பிளாஸ்டிக் கொடி போன்றவை (எந்த அளவில் இருந்தாலும்) தடை செய்யப்பட்டு இருந்தன. இந்த தடையிலிருந்து, பால், எண்ணெய், மருந்து, ஷாம்பூ, சிப்ஸ் ஆகியவற்றை பேக்கிங் செய்யும் பிளாஸ்டிக்குக்கும், வெளிநாட்டு ஏற்றுமதிக்கு தேவையான பிளாஸ்டிக்குக்கும் விதி விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது.
எனினும், இந்த தடை, நடைமுறைக்கு சாத்தியப்படவில்லை. கேரி பேக் தடை பொதுமக்களுக்கும், ஹோட்டல் நடத்துபவர்களுக்கும், சிறுவியாபாரிகளுக்கும் பெரும் அசௌகரியங்களை ஏற்படுத்தின. இதனால், கேரி பேக் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களை, வெளிமாநிலங்களில் இருந்து வரவழைத்து, பொதுமக்கள் பயன்படுத்தப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பொதுமக்களுக்கு மேலும் சிரமத்தை ஏற்படுத்தும் வகையில், சிப்ஸ் போன்ற தின்பண்டங்கள் மற்றும் சோப்புகள் போன்ற பொருட்களை பொட்டலமிட பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குகளும் தடை செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தை பிளாஸ்டிக் மாசு இல்லாத மாநிலமாக மாற்றுவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த உத்தரவு ஜூன் 5-ந் தேதியில் இருந்து அமலுக்கு வருவதாக அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

இந்த மேம்போக்கான நடவடிக்கையால், ஊறுகாய், முறுக்கு, சிப்ஸ், கடலைமிட்டாய் உற்பத்தியாளர்கள் முதல், பல்வேறு சிறுகுறு தயாரிப்பாளர்களும் கடும் சிரமத்துக்கு உள்ளாவார்கள் என்று பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர்.