“ஸ்பா” என்கிற பெயரில் வீட்டுக்கே சென்று பாலியல் தொழில்.. ‘டிக்டாக்’ புகழ் சூர்யா உட்பட 10 பேர் கைது!!

திருச்சியில் பாலியல் தொழில் கொடிகட்டிப் பறப்பதாகப் புகார் எழுந்திருக்கிறது.`பாடி மசாஜ்’ (ஸ்பா) என்கிற பெயரில் வீட்டுக்கே சென்று பாலியல் தொழில் நடத்தும் அளவுக்கு நிலைமை மோசமடைந்திருக்கிறது. இளைஞர்கள், ஐடி ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் மற்றும் முதியவர்களைக் குறிவைத்து இந்த டீம் பணத்தைக் கறப்பதாக போலீஸாருக்குப் புகார் சென்றது.
திருச்சி மாநகரில் ஸ்பா சென்டர் என்ற பெயரில் பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தி, போலியாக மசாஜ் சென்டர் நடத்திவரும் குற்றவாளிகளைப் பிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் உத்தரவிட்டார். பெண் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுவந்தனர். இந்தநிலையில் நேற்று மதியம் தனிப்படை டீமுக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் உறையூர், அண்ணாமலை நகர், தில்லை நகர், டி.வி.எஸ் டோல்கேட், ஜி கார்னர் ஆகிய இடங்களில் தனிப்படை டீம் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டது.
`ஸ்பா மையம்’ என்ற போலியான பெயரில் கட்டடங்களை வாடகைக்கு எடுத்து ஏழ்மையிலுள்ள பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதில்` டிக்டாக்’ புகழ் ரௌடி பேபி சூர்யா என அழைக்கப்படும் திருப்பூர் குமரன் தெருவைச் சேர்ந்த விநாயகம் என்பவரின் மனைவி சூர்யா என்கிற சுப்புலட்சுமியும் கைதுசெய்யப்பட்டார். புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் வெள்ளாளர் தெருவைச் சேர்ந்த அவரது உறவினர் தினேஷும் கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பாக உறையூர், கே.கே நகர், தில்லை நகர் போலீஸாரும், விபசாரத் தடுப்புப் பிரிவு போலீஸாரும் வழக்குகள் பதிவு செய்தனர். இந்த விவகாரத்தில் சூர்யா என்கிற சுப்புலட்சுமி, புரோக்கர் தினேஷ் உள்ளிட்ட 10 பேரை போலீஸார் கைதுசெய்தனர். இதில், பாதிக்கப்பட்ட 12 பெண்கள் மீட்கப்பட்டு அரசுப் பெண்கள் பாதுகாப்பு இல்லத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
இது குறித்து கமிஷ்னர் லோகநாதனிடம் பேசினோம்.“ஸ்பா சென்டர்களைத் தொடர்ந்து கண்காணித்துக்கொண்டிருந்தோம். ஐந்து இடங்களில் பாலியல் தொழில் நடப்பதாகத் தகவல் வந்தது. அதன்பேரில் போலீஸார் அதிரடியாக ஆய்வு செய்து பலரைக் கைதுசெய்திருக்கிறார்கள். ஸ்பா சென்டரை நடத்தும் உரிமையாளர்களோடு சூர்யா என்ற பெண்ணும் இணைந்து, இந்த ஸ்பா தொழிலை நடத்திவந்தது விசாரணையில் தெரியவந்தது.
அதன் அடிப்படையில் அவரையும் கைதுசெய்து, அரசுக் காப்பகத்துக்கு அனுப்பிவைத்திருக்கிறோம். சட்டத்துக்குப் புறம்பான, இது போன்ற `ஸ்பா’ என்ற பெயரில் பெண்களை ஏமாற்றி விபசாரத்தில் ஈடுபடுத்திவருவது கண்டறியப்பட்டதால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.