ஒரு இளைஞரின் உயிரை காக்க… இரு மாநிலங்களின் துரித போராட்டம்!

ஹைதராபாத்தில் உள்ள கேஐஎம்எஸ் இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவைசிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வந்த இளைஞருக்கு புனேவைச் சேர்ந்தவரின் நுரையீரல் பொருத்தப்பட்டு, மறுவாழ்வு கிடைத்துள்ளது.
ஆந்திர மாநிலத்தில் உடல் உறுப்பு தானத்தை செயல்படுத்தி வரும் ஜீவன்தான் திட்டத்தில், நுரையீரல் தானம் கேட்டு ஹைதராபாத் இளைஞர் பதிவு செய்திருந்த நிலையில், கடந்த ஞாயிறன்று புனேவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி, மூளைச் சாவு அடைந்தார். அவரின் நுரையீரல், அங்கிருந்து சிறப்பு விமானம் மூலம் ஹைதராபாத்துக்குக் கொண்டு வரப்பட்டது.
புனே தனியார் மருத்துவமனையில் இருந்து விமான நிலையத்தை அடையும் வழி மற்றும் ஹைதராபாத் விமான நிலையத்தில் இருந்து கேஐஎம்எஸ் மருத்துவமனைக்கு வரும் சாலை முழுவதையும் தங்களது கட்டுப்பாட்டில் எடுத்து, இரு மாநில போக்குவரத்துக் காவலர்களும் கவனமுடன் செயல்பட்டு, தானமாகப் பெறப்பட்ட நுரையீரல் மருத்துவமனையை மிக விரைவாக சென்றடையும் வகையில் பணியாற்றினர்.
இந்த சேவைக்கு இந்திய விமான நிலைய அதிகாரிகளும் உதவ முன் வந்ததால், கேஐஎம்எஸ் மருத்துவமனைக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை வெற்றிகரமாக நுரையீரல் வந்தடைந்தது. உடனடியாக அங்கு சிகிச்சை பெற்று வந்த இளைஞருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு நுரையீரல் பொருத்தப்பட்டுள்ளது.