இறுதி ஆண்டு தேர்வெழுதும் மாணவருக்கு புத்துணர்ச்சி வழங்கிய புதுச்சேரி பல்கலைக்கழகம்!!!

கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதலாம் என்று புதுச்சேரி பல்கலைக்கழகம் அனுமதி அளித்துள்ளது.
கொரோனா காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற வேண்டிய கல்லூரி இறுதியாண்டு தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் புதுச்சேரி பல்கலைக்கழகத் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி லாசர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் இறுதி தேர்வு எழுத ஆன்லைன், ஆப்லைன் என மாணவர்கள் விரும்பும் வகையில் தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். பல்கலைக்கழக மானிய குழு பரிந்துரையின்படி இறுதியாண்டு தேர்வு எழுதும் மாணவர்களின் அறைகளில் புத்தகம், குறிப்பேடுகளை பார்த்து தேர்வு எழுத அனுமதிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கேள்விகளுக்கான பதில்களை மாணவர்கள் புரிந்து கொண்டு பதில் அளிக்க இந்தமுறை வழிவகை செய்யும் எனவும், மாணவர்கள் ஏ4 அளவுக்கொண்ட வெள்ளைத்தாளில் கருப்பு மை கொண்டு பதில் அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
தேர்வுகளின் காலம் மற்றும் பிற நிபந்தனைகளும், வினாத்தாள்களின் முறை ஆகியவை ஏற்கனவே முன்பு இருந்த படியே இருக்கும். தேர்வு எழுதிய அனைத்து பக்கங்களையும் தேர்வு முடிந்த 30 நிமிடத்திற்குள் ஸ்கேன் செய்து அந்தந்த கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும். முதல் பக்கத்தில் மாணவர்களின் பதிவு எண், பாடம், பிரிவு, தேதி ஆகியவற்றை குறிப்பிட்டு தங்கள் கையெழுத்தை முழுமையாக எழுத வேண்டும். 2-ம் பக்கத்தில் இருந்து விடைகளை எழுத தொடங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.