நீட், ஜே.இ.இ தேர்வுகளை தள்ளி வைக்கக்கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நீட், ஜே.இ.இ தேர்வுகளை தள்ளி வைக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.
இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பல்வேறு வகையான தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றது. அதைப் போல, நீட் தேர்வும் தள்ளி வைக்கப்பட்டது. இதனை மேலும் தள்ளி வைக்க வேண்டும் என்று பெற்றோர் தரப்பில் கோரிக்கை எழுந்தது.
இதன் பின் மருத்துவ படிப்பிற்கான இந்தாண்டு நீட் தேர்வு செப்டம்பர் 13-ஆம் தேதி நடைபெறும் என்றும், ஜே.இ.இ எனப்படும் பொறியியல் படிப்புக்கான நுழைவுத்தேர்வானது செப்டம்பர் 1 முதல் 6-ஆம் தேதிக்குள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. எனவே நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுகளை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தள்ளிவைக்க வேண்டும் எனக்கோரி 11 மாணவர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது, மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், “தேர்வை தள்ளிவைப்பதால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும். கொரோனாவால் வாழ்க்கை ஓட்டத்தை நிறுத்திவிட முடியாது. அனைத்து தடுப்பு நடவடிக்கைகளுடன் நகர்ந்து தான் ஆக வேண்டும். ஓராண்டை இழக்க மாணவர்கள் தயாராக உள்ளனரா? என கேள்வி எழுப்பியுள்ளது.