தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம்!!

தமிழகத்தில் வருகிற 16ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட உள்ள நிலையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி இன்று காலை ஆலோசனை மேற்கொள்கிறார். தமிழகத்தில் வருகிற 16ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
அதைத்தொடர்ந்து நவம்பர் 16ம் தேதியில் இருந்து டிசம்பர் 15ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, நீக்கம், திருத்தம் உள்ளிட்ட பணிகள் நடைபெறுகிறது. ஜனவரி 20ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவதற்கு முன் வழக்கமாக அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்படும்.
அந்த வகையில் இன்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை நடத்துகிறார். இந்த கூட்டம் சென்னை, தலைமை செயலகத்தின் 2வது மாடியில் உள்ள கூட்ட அரங்கில் காலை 11.30 மணிக்கு நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜ, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் சார்பில் பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள்.
மேலும், இந்த ஆலோசனை கூட்டத்தில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்வது, இரட்டை பதிவுகளை நீக்குவது, வாக்குச்சாவடி முகவர்களுக்கு தேவையான வசதிகள் ஏற்படுத்துவது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. கூட்டத்திற்கு பின்பு வாக்களர் பட்டியலில் பெயர் சேர்ப்பது நீக்குவது தொடர்பாக சிறப்பு முகாம் நடத்துவது குறித்து அறிவிப்பு வெளியாகும்.
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுவதில் இருந்து டிசம்பர் 15ம் தேதிக்கு இடைப்பட்ட காலக்கட்டத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்பும் தகுதியுடைய வாக்காளர்கள், பெயர் நீக்கம், திருத்தம், இடமாற்றம் விரும்புவோர் அதற்கான விண்ணப்பங்களை (6, 7, 8, 8ஏ) அளிக்க வேண்டும் என்றும், இது தொடர்பான விண்ணப்பங்கள் அனைத்தும் வரும் ஜனவரி 5-ம் தேதி இறுதி செய்யப்பட்டு ஜனவரி 20ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.