விவசாயிகளின் நாடு தழுவிய போராட்டத்திற்கு மக்கள் நீதி மய்யம் ஆதரவு; கமல்ஹாசன் டுவிட்

வேளாண் சட்டத்தை திரும்ப பெறக்கோரி நாடு தழுவிய போராட்டத்திற்கு விவசாயிகள் அழைப்பு விடுத்த நிலையில், மக்கள் நீதி மய்யம் ஆதரவு தெரிவித்துள்ளது.
வேளாண் சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 10 நாட்களுக்கு மேலாக போராட்டம் நீடித்து வருகிறது. விவசாய குழுவிற்கும் மத்திய அரசுக்கும் இடையிலான பல கட்ட பேச்சுவார்த்தையில் நடத்தப்பட்டும் உடன்பாடு எட்டப்படவில்லை.
8-ந்தேதி விவசாயிகள் நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். பல்வேறு அரசியல் தலைவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மக்கள் நீதி மய்யமும் போராட்டத்தில் பங்கேற்கும் என கமல் ஹாசன் தெரவித்துள்ளார்.இதுகுறித்து கமல் ஹாசன் டுவிட்டர் பக்கத்தில் ‘‘விவசாயிகள் போராட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுவின் கோரிக்கையை ஏற்று, இந்திய அளவில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்ற விவசாயிகளின் குரலுக்கு கூடுதல் வலுசேர்க்கும் வகையில் @maiamofficial டிசம்பர் 8-ம் தேதி நடக்கவிருக்கும் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் பங்கேற்கும்’’ எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், ‘‘டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்தில் @maiamofficial இன் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு நமது ஆதரவினைத் தெரிவித்தனர். விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவிசாய்க்க வேண்டும். விரும்பப்படாத வேளாண் மசோதாவை திரும்பப் பெற வேண்டும் #நான்_கேட்பேன் #உழவே_தலை_உழவனை_நினை’’ எனத் தெரிவித்துள்ளார்.