அமெரிக்காவில் நவம்பர் 1-ந் தேதிக்குள் கொரோனா தடுப்பூசி!!! மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கும் மக்கள்…

அமெரிக்காவில் நவம்பர் 1-ந் தேதிக்குள் கொரோனா தடுப்பூசி போட டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் அதிரடி முடிவு எடுத்துள்ளது.
உலக அளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 62 லட்சத்தை தாண்டிவிட்டது. அங்கு வருகிற நவம்பர் மாதம் 3-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது.
இதில் மீண்டும் போட்டியிடும் ஜனாதிபதி டிரம்ப், தேர்தலுக்கு முன்பாக கொரோனா தடுப்பூசியை கொண்டு வந்துவிட வேண்டும் என்பதில் மிகவும் தீவிரமாக இருக்கிறார். தடுப்பூசியை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதன் மூலம் மக்களின் நம்பிக்கையை பெற முடியும் என்றும், இது தனது வெற்றிக்கு வழிவகுக்கும் என்றும் அவர் நம்புகிறார். அங்குள்ள அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் தாங்கள் தயாரித்துள்ள தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் மூன்றாவது கட்ட சோதனையை எட்டி உள்ளது.

இதற்கிடையே தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கும் அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகத்தின் தலைவர் ஸ்டீபன் ஹான் கூறுகையில், தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் மூன்றாவது கட்ட சோதனை முடிவதற்கு முன்பே அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதிக்க தயாராக இருப்பதாக தெரிவித்து உள்ளார்.
எனவே அக்டோபர் மாதத்திலேயே தடுப்பூசியை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான ஆயத்த நடவடிக்கைகளை டிரம்ப் நிர்வாகம் மும்முரமாக மேற்கொண்டு உள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் இயக்குனர் ராபர்ட் ரெட்பீல்டு, மாகாண கவர்னர்களுக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.
அதில், கொரோனா தடுப்பூசியை வினியோகிப்பதற்காக மெக்கசன் கார்ப்பரேஷன் நிறுவனம் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்துடன் ஒப்பந்தம் செய்து உள்ளதாகவும், தடுப்பூசியை சுகாதார துறை, ஆஸ்பத்திரிகளுக்கு சப்ளை செய்வதற்கான அனுமதி கோரி அந்த நிறுவனத்திடம் இருந்து மாநிலங்களுக்கு விரைவில் விண்ணப்பங்கள் வரும் என்றும், அதற்கு தயாராக இருக்குமாறும் கூறி உள்ளார். மேலும் விண்ணப்பங்களை விரைவில் பரிசீலித்து நவம்பர் 1-ந் தேதிக்குள் முழு அளவில் மக்களுக்கு தடுப்பூசியை போடுவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறும் கடிதத்தில் அவர் கேட்டுக்கொண்டு இருக்கிறார்.
கொரோனா தடுப்பூசி ஒரு மாத இடைவெளியில் இரு முறை போடப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.