ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 2 லட்சம் கோடி டாலர்- ஆக உயர்வு…

ஆப்பிள் நிறுவனம் 2 லட்சம் கோடி டாலர் சந்தை மதிப்பை அடைந்த முதல் அமெரிக்க நிறுவனமாக உயர்ந்து சாதனை படைத்துள்ளது.
பல்வேறு தொழில்நுட்பப் போட்டிகள் நிலவும் உலகில் 2 லட்சம் கோடி டாலர் சந்தை மதிப்பைப் பெற்ற இரண்டாவது நிறுவனமாக ஆப்பிள் நிறுவனம் வளர்ந்துள்ளது. மாறி வரும் தொழில்நுட்ப சூழலிலும் அதிக அளவிலான முதலீட்டாளர்களை இந்நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
கரோனா பரவல் சூழ்நிலையில் பல்வேறு நிறுவனங்களும் நிதிச்சுமையில் சிக்கியுள்ளன. ஆனால் உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான ஆப்பிள், மைக்ரோசாப்ட், கூகிள், பேஸ்புக் போன்ற நிறுவனங்கள் தங்களது சந்தை மதிப்பில் குறிப்பிடத்தக்க உயர்வை அடைந்துள்ளன.
ஆப்பிள் நிறுவனம் தனது 1 லட்சம் கோடி அமெரிக்க டாலர் சந்தை மதிப்பை கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அடைந்தது. அதனைத் தொடர்ந்து 2 வருட இடைவெளியில் 2 லட்சம் கோடி டாலர் சந்தை மதிப்பைத் தொட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் பங்கு இந்த ஆண்டு கிட்டத்தட்ட 60% உயர்ந்துள்ளது. கடந்த ஜூலை மாதம் இந்நிறுவனம் மூன்றாம் காலாண்டில் 59.7 பில்லியன் டாலர் வருவாயை ஈட்டியுள்ளது.
2 லட்சம் கோடி அமெரிக்க டாலர் சந்தை மதிப்பை அடைந்த முதல் நிறுவனமாக சவுதி அரேபியாவின் அரம்கோ உள்ளது.