2,500 ரூபாய் ரொக்கம் அடங்கிய பொங்கல் பரிசு வாங்க இன்றே கடைசி நாள்..

ரேஷன் கடைகளில், 2,500 ரூபாய் ரொக்கம் அடங்கிய பொங்கல் பரிசு வாங்குவதற்கான அவகாசம், இன்றுடன்(ஜன.,25) முடிகிறது.
தமிழக அரசு, பொங்கலை முன்னிட்டு, 2.10 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு, தலா, 2,500 ரூபாயுடன், பச்சரிசி, சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலம், கரும்பு, துணிப் பை அடங்கிய பரிசு தொகுப்பை அறிவித்தது.
இந்த பரிசு தொகுப்பு, ரேஷன் கடை வாயிலாக, இம்மாதம், 4ம் தேதி முதல் வழங்கப்பட்டது. அவற்றை வாங்குவதற்கான அவகாசம், 13ம் தேதியுடன் முடிந்தது. பொங்கல் கொண்டாட, மக்கள் சொந்த ஊர் சென்றது உள்ளிட்ட காரணங்களால், மூன்று லட்சம் கார்டுதாரர்கள், பரிசு தொகுப்பு வாங்காமல் இருந்தனர்.
இதனால் விடுபட்ட கார்டுதாரர்கள், 18ம் தேதி முதல், 25ம் தேதி வரை, பொங்கல் பரிசு வாங்கிக் கொள்ள, உணவு வழங்கல் துறை அவகாசம் அளித்தது. இந்த அவகாசம், இன்றுடன் முடிகிறது. இதுவரை, பரிசு தொகுப்பு வாங்காதவர்கள், இன்று மாலைக்குள் வாங்கிக் கொள்ளலாம். இனி, அவகாசம் நீட்டிக்கப்படாது என, தெரிகிறது.