சொத்துக்காக அக்காவையும், அவரது ஒரு வயது குழந்தையையும் உயிருடன் கொளுத்திய தங்கை..

கள்ளக்குறிச்சி மாவட்டம், அசகளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னசாமி. இவருக்கு சுமதி, சுஜாதா என்று இரண்டு மகள்கள். இருவருக்கும் திருமணமாகி, மூத்த மகள் சுமதிக்கு ஒரு வயதில் ஒரு குழந்தையும், இளைய மகள் சுஜாதாவுக்கு 3 மாதத்தில் ஒரு ஆண் குழந்தையும் இருக்கின்றன. பிரசவத்துக்காக தாய் வீட்டுக்கு வந்த இளைய மகள் சுஜாதா, குழந்தை பிறந்து 3 மாதங்களாக அங்கேயே தங்கியிருந்தார். அப்போது தனது மூத்த மகளை வீட்டுக்கு வந்து தங்கிவிட்டுச் செல்லுமாறு அழைத்திருக்கிறார் சின்னசாமி.
அதன்படி, தனது குழந்தை ஸ்ரீநிதியுடன் தந்தை வீட்டுக்கு கடந்த வெள்ளிக்கிழமை வந்திருக்கிறார் சுமதி. சின்னசாமியும், அவரது மனைவியும் வேலைக்குச் சென்றிருந்த நிலையில், வீட்டில் சுமதியும், சுஜாதாவும் மட்டுமே இருந்திருக்கின்றனர். அன்றைய தினம் மதியத்துக்கு மேல் வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்த சுஜாதா,“அக்காவுக்கு பேய் புடிச்சுக்கிருச்சு. அருவாளால அவளையும், குழந்தையையும் வெட்டிக்கிட்டு மண்ணெண்ணெய் ஊத்தி கொளுத்திக்கிட்டா” என்று கூச்சலிட்டிருக்கிறார்.
அடுத்த சில நிமிடங்களில் தலையில் வெட்டுக்காயங்களுடன் ரத்தம் வழிந்தவாறு, உடலில் ஆடைகள் இல்லாமல் தீயில் கருகியபடி அலறித் துடித்துக்கொண்டு வீட்டிற்கு வெளியே வந்து விழுந்தார் சுமதி. அதேபோல அவரது குழந்தை ஸ்ரீநிதியும் தீக்காயங்களுடன் அலறிக் கொண்டிருந்தது. அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஊர் மக்கள், இருவரையும் மீட்டு, சுமதிக்கு ஆடை அணிவித்து 108 ஆம்புலன்ஸ் மூலம் வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது, “ஐயோ.. கடவுளே நாசமாப் போன பேய், எங்க அக்காவை இப்படி பண்ணிடுச்சே.. ஸ்ரீநிதி செல்லம்” என்று கதறியழுதிருக்கிறார் தங்கை சுஜாதா. இதற்கிடையில் சுமதியையும், குழந்தை ஸ்ரீநிதியையும் வேப்பூர் அரசு மருத்துவமனையில் இருந்து மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கும், அங்கிருந்து செங்கல்பட்டு மருத்துவமனைக்கும் அழைத்துச் செல்லப்பட்டனர்.
ஆனால் சிகிச்சைப் பலனின்றி கடந்த 2-ம் தேதி சுமதியும், மறுநாள் 3-ம் தேதி அவரது குழந்தை ஸ்ரீநிதியும் உயிரிழந்தனர். இதற்கிடையில் பெங்களூருக்கு வேலைக்குச் சென்றிருந்த சுமதியின் தந்தை சின்னசாமி, “தனது மகள் சுமதிக்கு பேய் பிடித்ததால் தன்னைத்தானே அரிவாளால் வெட்டிக் கொண்டு, உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்” என்றும் வரஞ்சரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், சுமதியின் சாவில் மர்மம் இருப்பதாக அவரது கணவர் இளையராஜாவும், அவரது உறவினர்களும் சாலை மறியலில் ஈடுபட்டதுடன், சுஜாதா மீது சந்தேகம் இருப்பதாகவும் காவல்துறையினரிடம் தெரிவித்தனர். அதனடிப்படையில் வழக்கை விசாரித்த காவல்துறை, சுஜாதாவை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தது.
முதலில் குற்றச்சாட்டை மறுத்து அழுத சுஜாதா, பின்னர் தனது அக்காவையும், குழந்தை ஸ்ரீநிதியையும் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அவர் அளித்த வாக்குமூலமாக காவல்துறை தரப்பில் கூறுவது இதுதான். “என் அப்பா சமீபத்தில் 20 சென்ட் இடம் வாங்கினார். அதை எனக்கு எழுதிக் கொடுக்கும்படி அவரிடம் கேட்டேன். ஆனால், அக்காவும் அதில் பாதியைத் தனக்கு தர வேண்டும் என்று அவரிடம் கேட்டார். அப்பாவும், அம்மாவும் அன்று வீட்டில் இல்லாததால், இதுதொடர்பாக எனக்கும் அக்காவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.