அவதூறான வீடியோ பதிவுகளை வெளியிட்ட வழக்கில், ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன் கைது!!

உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள், அவர்களின் குடும்பத்தினர் குறித்து அவதூறான வீடியோ பதிவுகளை வெளியிட்ட வழக்கில், ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தில், நீதிபதியாக பணியாற்றி, 2017ல் ஓய்வு பெற்றவர் கர்ணன். இவர், சில தினங்களுக்கு முன் வெளியிட்ட, ‘வீடியோ’ ஒன்றில், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் குறித்து, அவதுாறு பரப்பும் வகையில் பேசியிருந்தார். இது, சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து, கர்ணன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, சென்னை உயர் நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு கடிதம் எழுதினர். மேலும், சென்னை, போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் புகார் அளித்தனர். மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த விவகாரத்தில் இரண்டு முறை போலீசார் முன்னிலையில், கர்ணன் ஆஜராகி விளக்கமளித்திருந்தார்.
இந்த விவகாரத்தில் கர்ணனுக்கு எதிராக வழக்குப்பதிந்து விசாரணை நடத்தக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள், நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக டிஜிபி மற்றும் சென்னை போலீஸ் கமிஷனரை நேரில் ஆஜராக உத்தரவிட்டு, விசாரணையை வரும் 7 ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.
இந்நிலையில், சென்னை ஆவடியில் , முன்னாள் நீதிபதி கர்ணனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.