இறைச்சி கடைகள் திறந்தாச்சு… முண்டியடித்தது கூட்டம்!

நீண்ட நாட்களாக ஞாயிற்று கிழமை தளர்வற்ற முழு ஊரடங்கு இருந்தது இம்மாதம் விலக்கிக்கொள்ளப்பட்டதால், இன்று காலை இறைச்சி, மீன் கடைகள் திறக்கப்பட்டன. இதனால் அசைவ பிரியர்கள் மீன், இறைச்சி கடைகளில் குவிந்தனர்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு போடப்பட்டு வந்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு இம்மாதம் அந்த கட்டுப்பாடு தளர்த்தப்பட்டது. ஆனாலும் மக்கள் காணாததை கண்டது போல் இறைச்சி மற்றும் மீன் கடைகள் முன்பு கூட்டமாக கூட்டமாக குவியத் தொடங்கினர்.
சென்னை பட்டினப்பாக்கம், காசிமேடு, சிந்தாதரிப்பேட்டை மீன் மார்க்கெட்டுகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது. பலர் முகக்கவசமின்றி, அருகருகே நின்று கொண்டு உற்சாகமாக பேரம் பேசி மீன்களை வாங்கிச் சென்றனர். புளியந்தோப்பு ஆட்டுத்தொட்டி இறைச்சி சந்தையில் கூட்டம் அலைமோதியது. அதே போல் சென்னையிலுள்ள பிரியாணி கடைகள் பலவற்றிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.
அதே போல் மாவட்டம் முழுவதும் உள்ள இறைச்சி மற்றும் மீன் சந்தைகளிலும் காலை முதலே மக்கள் கோழி, ஆட்டிறைச்சிகள், மீன்களை வாங்கிச் சென்றனர். வியாபாரம் பழைய நிலைக்கு திரும்பியதால் இறைச்சி, மீன் வியாபாரிகள் குஷியடைந்தனர்.