பிரசாந்த் கிஷோர் கொடுத்த ஷாக் சர்வே… ஆடிப் போன மு.க.ஸ்டாலின்!!!

2021ம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தலுக்காக தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் களத்தில் இறங்கி வேலை பார்த்து வருகின்றன. கட்சியின் அடிப்படை கட்டமைப்புகளை வலுப்படுத்துவது, கட்சியின் நிர்வாகிகளுக்கு கட்டளைகள் பிறப்பிப்பது என்று சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருக்கின்றன.
இந்த செயல்பாடுகளில் மற்ற கட்சிகளை விட அனைவரையும் திரும்பி பார்க்க வைத்திருப்பது திமுக தான். காரணம்… வட இந்திய அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் என்பவரை தேர்தல் வியூக ஆலோசகராக நியமித்து இருப்பது தான். அவரின் ஐபேக் நிறுவனத்துடன் திமுக ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது. அதன்படி தேர்தல் கள வேலைகளில் இறங்கிய பிரசாந்த் கிஷோர் டீம், பல கட்ட சர்வேக்களை எடுத்து ஸ்டாலினிடம் அளித்துள்ளது.
அதில் தற்போது தரப்பட்டுள்ள சர்வேயை கண்டு அதிர்ந்து போயிருக்கிறாராம் ஸ்டாலின். அதாவது காங்கிரஸ் கட்சியின் வாக்குப்பதிவு சதவீதம் 2 மடங்காக அதிகரித்துள்ளது என்பதுதான். 4 என்பதில் இருந்து 8 சதவீதம் என்று உயர்ந்து இருக்கிறதாம் காங்கிரஸ். இந்த வாக்கு சதவீத உயர்வை கண்டு தான் ஸ்டாலின் அதிர்ந்து போயிருக்கிறாராம்.
ஏன் என்றால் 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் காங்கிரசின் வாக்கு சதவீதம் 4. ஆனால் தொகுதி ஒதுக்கீட்டின் போது காங்கிரஸ் கொடுத்த குடைச்சலை ஸ்டாலின் இன்னமும் மறக்கவில்லையாம். அக்கட்சியில் தொண்டர்கள் எண்ணிக்கையைவிட தலைவர்களின் எண்ணிக்கை அதிகம். ஆளாளுக்கு சீட் கேட்டு அடம்பிடித்தால் எப்படி என்று திமுக கடுகடு என்று கோப முகத்தை காட்டியது. 85 தொகுதிகள் என்று ஆரம்பித்து 65, 50 என்று ஆரம்பித்து கடைசியாக 41 என்று தேர்தல் உடன்படிக்கை கையெழுத்தானது.
இந்த முறை 8 சதவீதம் என்று வாக்கு சதவீதம் என்று உயர்ந்திருப்பது ஸ்டாலினுக்கு குடைச்சல் கொடுத்திருக்கிறதாம். ஏன் என்றால் 4 சதவீதம் என்ற போதே கொடுத்த தொந்தரவை மறக்காத ஸ்டாலின், 8 சதவீதம் என்றால் எப்படி இருக்கும் நினைக்க ஆரம்பித்து உள்ளாராம்.
ஐபேக் சர்வே பற்றி காங்கிரசுக்கு தகவல் போக, குஷியில் இருக்கின்றனராம். கடந்த முறை விட்டதை போன்று இருக்கக் கூடாது, இம்முறை எப்படியும் 60க்கும் அதிகமான தொகுதிகளை வாங்கிவிட வேண்டும் என்றும், 60 இல்லாவிட்டால் அரை சதம் என்ற கணக்கை முன் வைக்க ஆரம்பித்து டெல்லி தலைமைக்கும் தெரிவிக்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.