இலங்கை நாடாளுமன்ற தேர்தல்: அறுதி பெரும்பான்மையோடு மாபெரும் வெற்றியை ருசித்த மகிந்தா ராஜபக்ச!!!!

இலங்கையின் 9ஆவது நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக நடத்தப்பட்ட தேர்தலில் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வரலாற்று ரீதியிலான வெற்றியை தன்வசப்படுத்தியுள்ளது.
மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி 68 லட்சத்து 53 ஆயிரத்து 690 வாக்குகளை பெற்று மாபெரும் வெற்றியை தனதாக்கிக் கொண்டது.
225 இடங்களில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுகொள்ளும் நோக்குடன் களமிறங்கிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு அதிகபடியான வாக்குகளை பெற்றுள்ளது.
150 தொகுதிகளில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுகொள்ள முடியும் என்ற நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு 145 இடங்களில் வெற்றி கிடைத்துள்ளது.
அந்த வகையில் மொத்தமான 225 இடங்களில் 2/3 பங்கான 150 இடங்களை பெறுவதற்கு மேலும் 5 இடங்கள் பெற வேண்டியுள்ள நிலையில், ஏஐடிசி (2), ஶ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி (01 ), தேசிய காங்கிரஸ் (01 ) உள்ளிட்ட கட்சிகள் இணைவதன் மூலம், அதனை அடையும் என அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இதில் குறிப்பாக சிங்கள மக்கள் அதிகமாக வாழும் தெற்கு மாவட்டங்களில் 60 சதவீதத்துக்கும் மேலான வாக்குகள் வித்தியாசத்தில் பெரும்பாலான இடங்களில் ராஜபக்சே கட்சி பெற்று வெற்றி பெற்றுள்ளது.
இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் அதிபர் கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான, ஸ்ரீலங்கா பொதுஜன அதிகபட்ச பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளதை தொடர்ந்து புதிய நாடாளுமன்றம் வரும் 20ஆம் தேதி கூடும் என்று ஏஅறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்தலில் மிகப்பெரிய அடியாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சிக்கு(யுஎன்பி) இருந்தது. யுஎன்பி கட்சி ஒரு இடத்தில் மட்டுமே வென்றது. 22 தேர்தல் மாவட்டங்களில் ஒரு மாவட்டத்தில் கூட மிகப்பெரிய கட்சியான யுஎன்பி கட்சியால் வெல்ல முடியவில்லை.
1977-ம் ஆண்டு நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட விக்ரமசிங்கே, 4 முறை பிரதமராக இருந்துள்ளார். ஆனால், இந்த முறை அவரால் கொழும்பு மாவட்டத்தில் கூட வெல்ல முடியவில்லை. அவரின் யுஎன்பி கட்சி பல இடங்களில் 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. ஒட்டுமொத்தமாக யுஎன்பி கட்சி 2.49 லட்சம் வாக்குகள் அதாவது தேசிய அளவில் 2 சதவீதம் மட்டுமே பெற்று 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.
யுஎன்பி கட்சியிலிருந்து விலகி தனியாக எஸ்ஜேபி எனும் கட்சித் தொடங்கிய சஜித் பிரமேதாசா, முஸ்லிம் கட்சியின் ஆதரவுடன் 55 இடங்களில் வென்றுள்ளார். குறிப்பாக திரிகோணமலை மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களை பிரேமதசா கட்சி கைப்பற்றியுள்ளது.
சஜித் பிரேமதாசாவின் எஸ்ஜெபி கட்சி 2.70லட்சம் வாக்குகளைப் பெற்று, அதாவது 23 சதவீதம் வாக்குகளைப் பெற்று 2-வது பெரிய கட்சி எனும் அந்தஸ்தைப் பெற்றுள்ளது.
தமிழ் மக்கள் வாழும் பகுதியில் முக்கியக் கட்சியாக திகழும் தமிழ்தேசிய கூட்டமைப்பு இந்த முறை மோசமான தோல்வியைப் பெற்றது. கடந்த முறை 16 இடங்களில் வென்ற தமிழ்தேசியக் கூட்டமைப்பு இந்த முறை 10 இடங்களில் மட்டுமே வென்றது. தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மாவட்டங்களில் 3.27 லட்சம் வாக்குகள் அதாவது 2.82 சதவீதம் வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளது.
நடைபெற்று முடிந்த தேர்தலில் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு வாக்களித்த அனைவருக்கும், இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ச நன்றி தெரிவித்துள்ளார்.
அவர் “கடந்த ஜனாதிபதித் தேர்தலில் என்னால் முன்வைக்கப்பட்ட “சுபீட்சத்தின் நோக்கு ” கொள்கையை மீண்டும் ஒரு முறை மக்கள் சக்தியின் மூலம் உறுதிப்படுத்த இந்த பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன விற்கு மாபெரும் வெற்றியை தந்த உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்”. என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.