காசிமேடு பகுதியில் கடலில் குளிக்கச்சென்ற ஐந்துபேர்.. இழுத்துச் சென்ற ராட்சத அலை!! ஒருவர் உடல் மீட்பு..

சென்னை காசிமேடு பகுதியில் கடலில் குளிக்கச்சென்ற ஐந்துபேர் கடலலையில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டனர். இதில் ஒருவருடைய உடல் கரை ஒதுங்கிய நிலையில், மற்றவர்களை தேடும் பணி தீவிரமாகியுள்ளது.

தீபாவளியை ஒட்டிய விடுமுறை நாளான நேற்று மாலைப்பொழுதைக் கழிக்க ஒரே பகுதியைச் சேர்ந்த சில குடும்பத்தினர் சென்னை காசிமேடு கடற்கரை பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு பாறைகள் மற்றும் பெரிய கற்கள் நிரம்பியுள்ள பகுதியில் மாலைநேரங்களில் பலரும் வந்து அமர்ந்திருப்பது வழக்கம். பெரும்பாலும் இளைஞர்கள் அதிகமாகச் செல்லும் இடம் இது.

அரியலூர் மாவட்டத்திலிருந்து உறவினர் வீட்டுக்கு வந்த ஒரு குடும்பம், உறவினரின் அக்கம்பக்கத்து வீட்டாருடன் சேர்ந்து இந்த பகுதிக்கு வந்துள்ளனர். அவர்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து இளைஞர்கள் அங்கு விளையாடிக் கொண்டிருந்தபோது ராட்சத அலை ஒன்று சீறி வந்திருக்கிறது. அது ஐவரையும் கடலுக்கு இழுத்துச் சென்றுள்ளது.

வழக்கத்தைவிட நேற்றைய தினம் காற்றின் வேகம் அதிகமாவே இருந்துள்ளது. மேலும் கடலலையின் சீற்றமும் அதிகமாகவே இருந்துள்ளது. நேற்று அமாவாசை என்பதால் வழக்கமாகவே இந்த நாட்களில் கடலின் சீற்றம் சற்று அதிகமாக இருக்கும். இந்த அலைகளில் நன்கு நீச்சல் பயிற்சி பெற்றவர்களே திணறுவார்கள். அலையில் சிக்கிய ஐவருமே 18 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று தெரியவந்துள்ளது.

சில மணிநேரங்களுக்குப் பிறகு அருள்ராஜ் என்ற 17 வயது இளைஞரின் உடல் மட்டும் கிடைத்துள்ளது. மார்ட்டின், மார்கரேட், துர்கா மற்றும் மற்றொருவரின் உடல்களை காசிமேடு மீனவர்களும், தீயணைப்புத் துறை வீரர்களும் தீவிரமாக தேடும்பணியில் இறங்கியுள்ளனர்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x