“தெருவோர விற்பனையாளர்களுக்கு நிவாரண உதவித் தேவை.. கடன் அல்ல” – பிரியங்கா காந்தி டுவிட்!!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட தெருவோர வியாபாரிகளுக்கு கடனுதவி வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி இன்று தொடங்கி வைத்தார். இதுகுறித்து பேசிய அவர், “தெருவோர வியாபாரிகள் தங்கள் தொழிலை மீண்டும் தொடங்கி, தன்னிறைவு பெற முடியும் என்பது தமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது” என்று கூறினார்.
இந்நிலையில் தெருவோர வியாபாரிகள், சிறு வணிகர்களுக்கு தேவை நிவாரண உதவிதான் என்றும், கடன்கள் அல்ல என்றும் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரியங்கா காந்தி தனது டுவிட்டரில், “ இன்று உத்திரபிரதேசத்தின் சில தெருவோர விற்பனையாளர்களுடன் பிரதமர் பேசுகிறார். முழு பொதுமுடக்கத்தில், தெருவோர விற்பனையாளர்கள் மற்றும் சிறிய கடைக்காரர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இன்று, தெருவோர விற்பனையாளர்கள், கடைக்காரர்கள், சிறு வணிகர்கள் ஆகியோருக்கு சிறப்பு நிவாரண உதவித் தொகுப்பு தேவை, கடன் அல்ல.” என்று பதிவிட்டுள்ளார்.