தலையில் டிவி விழுந்து பரிதாபமாக பலியான 3 வயது குழந்தை!!

தாம்பரத்தில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது குழந்தை மீது டிவி பெட்டி விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தாம்பரம் சேலையூர் அடுத்த அகரம் தென் அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் பாலாஜி. இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார் .இவருக்கு திருமணமாகி இரண்டு ஆண் குழந்தை மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளனர்.
இவரது வீட்டில் உள்ள அலமாரியில், தொலைக்காட்சி பெட்டிக்கு அருகில் செல்போனை சார்ஜ் போட்டு வைப்பது வழக்கம். சம்பவத்தன்று பாலாஜியின் செல்போன் எண்ணிற்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது. அப்போது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை, செல்போன் ரிங்டோன் சத்தத்தை கேட்டு செல்போனை எடுக்க ஓடிச் சென்றுள்ளது.
அப்போது எதிர்பாராத விதமாக சார்ஜ் வயரில் சிக்கி அருகிலிருந்த தொலைக்காட்சி பெட்டி குழந்தையின் தலையில் விழுந்துள்ளது. தொலைக்காட்சி பெட்டி சிறுவனின் தலையில் விழுந்ததும் சிறுவன் கவியரசு அலறி துடித்தான். மகனின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த சிறுவனின் பெற்றோர், மகன் துடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்கள். அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
இதனையடுத்து உடலை கைப்பற்றிய சேலையூர் காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து 174 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 3 வயதுக் குழந்தையின் தலையில் தொலைக்காட்சி பெட்டி விழுந்து குழந்தை இறந்துள்ள சம்பவம், அந்த பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.