ஆட்குறைப்புக்கு தயாராகும் நிறுவனங்கள்!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, உலக அளவில், கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்தியாவை பொறுத்தவரை, கொரோனாவுக்கு முன்பிருந்தே, நாடு முழுதும் உள்ள குறு, சிறு, நடுத்தர தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தன. முந்தைய பொருளாதார மந்தநிலையை மேலும் வலுவாக்கும் வகையில், தற்போதைய கொரோனா சூழ்நிலை, கடும் சரிவை ஏற்படுத்தும் என, எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையில், மாத வாடகை, ஊழியர்கள் சம்பளம், மின் கட்டணம், வங்கி கடன் போன்ற மாதாந்திர நிரந்தர செலவுகள், சிறு வியாபாரிகளை பெரிதும் அச்சுறுத்தி வருகின்றன.
ஆட்குறைப்பு: இந்த நெருக்கடி காரணமாக, சில்லரை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள சிறு நிறுவனங்கள், 30 சதவீத ஆட்குறைப்பு செய்யப்போவதாகவும், நடுத்தர சில்லரை வர்த்தகத்தினர், 12 சதவீத ஆட்குறைப்புக்கு திட்டமிட்டுள்ளதாகவும், வர்த்தகர் சங்கங்கள் தெரிவித்தன.